ஊட்டி தாவிரவியல் பூங்காவில் சினிமா ஷூட்டிங் நடத்த தடை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும், பொலிவு பெறுகின்றன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 250 க்கும் மேற்பட்ட ரகங்களுடன், இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பூங்காவின் முகப்பு புல்தரையில் சிவப்பு மண் கொட்டப்பட்டு, உரமிட்டு புற்கள் நடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக மழை பெய்வதால் புற்கள் நன்கு வளரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊட்டி தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பிரகாசம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோடை சீசனுக்காக பூங்காவை தயார் படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதன் முதல் கட்டமாக நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பூங்காவின் பிரதான புல்தரையை மேம்படுத்தும் வகையில் மண் மற்றும் உரமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் புல்தரையில் சுற்றுலா பயணிகள் நடமாட தடை விதிக்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும் புல்தரை மீண்டும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படும்.
தற்போது, பூங்காவில் சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏப்ரல் முதல் தேதி முதல் ஜூன் மாதம் வரை பூங்காவில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications











