ஜெயராமின் ஆடுபுலி ஆட்டத்தில்.... மீண்டும் 'அம்மனாக' மாறிய ரம்யா கிருஷ்ணன்
சென்னை: தமிழ் சினிமாவில் அம்மன் வேடங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடிய ஒருசில நடிகைகளில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.
பட்டுச்சேலை அணிந்து கையில் சூலாயுதத்துடன் எதிரிகளை ரம்யா கிருஷ்ணன் அடித்துத் துவைக்கும் போது தியேட்டரில் சாமி வந்து ஆடாதவர்கள் குறைவே.
அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்த ரம்யா கிருஷ்ணன் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னர் ஆடுபுலி ஆட்டம் படத்தில் மீண்டும் அம்மனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஆடுபுலி ஆட்டம்
மல்லுவுட் இயக்குநர்களில் ஒருவரான கண்ணன் தாமரைக்குளம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆடுபுலி ஆட்டம். ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஆஷா சரத், ஓம்புரி மற்றும் பல்வேறு நட்சத்திரங்களின் பங்களிப்பில் ஆடுபுலி ஆட்டத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நடந்து வருகிறது.

முன்னணி நடிகர்கள்
ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், விக்ரம்,சூர்யா என்று முன்னணி நடிகர்களின் பெரும்பாலான படப்பிடிப்புகள் இந்தப் பகுதியில் அதிகமாக நடைபெற்றது. நாளடைவில் பிரமாண்டம் என்னும் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் சினிமா நகர்ந்து விட்டதால் தற்போது தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் இங்கே நடைபெறுவதில்லை.

மலையாள உலகினர்
நெல்லைப் பகுதிகளில் தமிழ் படப்பிடிப்பு தேய்ந்து விட்ட அதே நேரத்தில் மலையாள படப்பிடிப்புகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆடுபுலி ஆட்டம் படப்பிடிப்பின் முக்கிய காட்சிகளை குற்றாலம் பகுதிகளில் படக்குழுவினர் காட்சிப்படுத்தி வருகின்றனர்.

பன்மொழிகளில்
தமிழ் ,தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4மொழிகளில் தயாராகும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் மாதங்கி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் கதை
சுமார் 600 வருடங்களுக்கு முன்பு நடந்த பூர்வஜென்ம கதைகளின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகி வருகிறது. பூர்வ ஜென்மம் மற்றும் மர்மம்,திகில்,காதல்,சண்டை,காமெடி ஆகியவற்றை கலந்து கமர்ஷியல் ரீதியில் இப்படத்தை எடுத்து வருகின்றனர்.

படப்பிடிப்பில்
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன் மஞ்சள் சேலையுடன் கையில் தட்டு ஏந்தி வர அவரைச் சுற்றி நின்று கைகளில் வேப்பிலைகளுடன் மலை கிராமப் பெண்கள் நடனமாடுகின்றனர்.இதிலிருந்து தனது அம்மன் பணிகளை மீண்டும் ரம்யா கிருஷ்ணன் செவ்வனே செய்து வழக்கம் போல மக்களைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மலையாளம்
இந்தப் படத்தை வருகின்ற ஏப்ரல் 14ந் தேதி(விசு தினம்) மலையாளத்திலும் பின்னர் படிப்படியாக மற்ற மொழிகளிலும் வெளியிட ஆடுபுலி படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதுல யாரு ஆடு யாரு புலின்னு தெரியலையே?


Click it and Unblock the Notifications











