ஏரியில் மூழ்கிய அதிசயா
கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பின்போது, நடிகை அதிசயா ஏரியில் மூழ்கினார். சட்டென பாய்ந்து ஏரியில் குதித்த இயக்குநர் ராஜேஷ் அதிசயாவைக் காப்பாற்றினார்.
வட்டாரம் படத்தில் 2வது நாயகியாக நடித்தவர் அதிசயா. தஞ்சை தந்த இந்த அழகுப் பெண் இப்போது காலைப்பனி என்ற படத்தில் தனி நாயகியாக நடித்து வருகிறார்.புதுமுகம் ஒருவர்தான் இப்படத்தின் நாயகன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையான காலைப்பனி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. நாயகி அதிசயா, தனது காதலருடன் செல்போனில் மரம் ஒன்றில் அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற காட்சியை கொடைக்கானல் ஏரிப் பக்கம் எடுத்தனர்.
ஏரியை ஒட்டிச் சென்ற ஒரு மரத்தின் மீது அதிசயாவை ஏற்றி அமரச் செய்து படமாக்கினர். அப்போது திடீரென அதிசயா மரத்திலிருந்து தவறி ஏரிக்குள் விழுந்து விட்டார். அது சற்று ஆழமான பகுதியாகும் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நிலையில் இயக்குநர் ராஜேஷ் சட்டென தண்ணீருக்குள் பாய்ந்து அதிசயாவை காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்.
அதிசயா, பத்திரமாக மீட்கப்பட்டதால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து அதிசயாவிடம் கேட்டபோது, இயக்குநர் வடிவில் கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார்.
எனக்கு நீச்சல் தெரியும். இருந்தாலும் கூட தண்ணீருக்குள் மூழ்கியவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் நான் அதிர்ந்து விட்டேன். நல்ல வேளையாக என்னை இயக்குநர் காப்பாற்றி விட்டார் என்றார் பயம் நீங்காத முகத்துடன்.


Click it and Unblock the Notifications











