தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை'... ஜூன் 15ல் துவக்கம்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களைத் தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தேதி பலமுறை தள்ளிப்போனதால் வடசென்னை தொடங்கப்படுமா? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்தது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 15 ம் தேதி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா என 2 ஹீரோயின்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் 2 பாகங்களை ஒரே நேரத்தில் இயக்கி முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனால் தான் தனது கேரியரில் தொய்வு விழுந்துவிடக்கூடாது என தனுஷ் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொண்டதாக கூறுகின்றனர்.
'புதுப்பேட்டை' போல 'வடசென்னை'யில் தனுஷுக்கு வெவ்வேறு தோற்றங்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











