சினிமா ஷூட்டிங்-திருச்சியில் பரபரப்பு!
விஷால் நடிக்கும் மலைக்கோட்டை படத்தின் சண்டைக் காட்சியை திடீரென மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள திருச்சி பஸ் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி எடுத்ததால் மக்கள் பீதியடைந்து ஓடினர்.
விஷால், ப்ரியா மணி ஜோடியாக நடிக்கும் படம் மலைக்கோட்டை. இப்படத்தில் அஜய் ரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்ற சண்டைக் காட்சி திருச்சி பஸ் நிலையத்தில் படமாக்கப்பட்டது.வில்லன் கும்பல், அஜய் ரத்னத்தை துரத்தி துரத்தித் தாக்குவது போன்ற காட்சியை படமாக்கினர். பெரிய பெரிய அரிவாள்கள், கத்தி போன்றவற்றுடன் வில்லன் கும்பல் அஜய் ரத்னத்தைத் தாக்குவது போன்ற காட்சி அது.
இந்தக் காட்சியை படமாக்குவது குறித்து முன்கூட்டியே அறிவிக்கவில்லை. காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பை நடத்தினர்.
திடுமென கத்தி, அரிவாள்களுடன் ஒரு கும்பல் ஓடி வருவதைப் பார்த்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பீதியடைந்து ஓடினர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் கலவரமாக காணப்பட்டது.
பின்னர்தான் அது ஷூட்டிங் என தெரிய வந்தது. சொல்லாமல் கொள்ளாமல் நடந்த இந்த படப்பிடிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இப்படி ஷூட்டிங் நடத்த யார் அனுமதி கொடுத்தது என்று பெண்களும், பொதுமக்களும் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து பஸ் நிலையக் காவல் நிலையத்தில் சிலர் புகார் கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications











