கடலில் விழுந்த கார்த்திகா

தூத்துக்குடி நாயகி கார்த்திகா ஹீரோயினாக நடித்து வரும் படம் அலையோடு விளையாடு. இதில் விஜயன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார்.
முட்டம், குளச்சல் உள்ளிட்ட குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் முகாமிட்டு இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.
சமீபத்தில் விஜயன், கார்த்திகா மற்றும் வில்லன்கள் சம்பந்தப்பட்ட ஒரு படகு துரத்தல் காட்சியை குளச்சல் பகுதியில் கடலில் படமாக்கினர்.
அதன்படி கார்த்திகாவும், விஜயனும் ஒரு படகில் செல்ல, அவர்களை வில்லனின் ஆட்கள் துரத்துவது போல படம் பிடித்தார் இயக்குநர் ராகவன். கேமராவை ராஜ்ப்ரீத் கையாண்டார். வில்லன்களாக பொன்வண்ணன், மகாநதி சங்கர், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடித்தனர்.
கார்த்திகா, விஜயன் இருந்த படகு வேகமாக போய்க் கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி கார்த்திகா கடலில் விழுந்து விட்டார். இதைப் பார்த்து படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர்.
இதைக் கேட்டதும் அப்பகுதி மீனவர்கள் விரைந்து வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கார்த்திகாவைத் தூக்கி மீட்டனர். பின்னர் அரை மயக்கத்திலும், பதட்டத்திலும் இருந்த கார்த்திகாவை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகுதான் கார்த்திகா தெளிவானார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து படகு காட்சியை அப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பிற காட்சிகளைப் படமாக்கினர்.
கடலில் விழுந்த அதிர்ச்சியிலிருந்து கார்த்திகா விடுபட நெடு நேரம் ஆனதாம்.


Click it and Unblock the Notifications











