ஜெயலலிதா உடல் நிலை பாதிப்பு: ஸ்தம்பித்தது திரையுலகம்... படப்பிடிப்புகள் நிறுத்தம்!
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவே கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளது.
தமிழ் சினிமா பிரபலங்கள், சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் அபிமானிகள்தான். காரணம், திரைப்படத் துறையில் அவரது தலையிடாமை. திரைப்பட விழாக்கள், சினிமாக்காரர்கள் ஏற்பாடு செய்யும் விழாக்கள் என எதிலுமே கலந்து கொள்வதைத் தவிர்த்தவர் ஜெயலலிதா.

சினிமாவில் நிலவும் அரசியலையும் அவர் கண்டு கொண்டதில்லை. முதல்வரின் இந்த பாணி, திரைத் துறையை முன்பை விட சுதந்திரமாகவே இயங்க வைத்துள்ளதால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்ததிலிருந்து திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 72 நாட்களாக திரைப் பிரபலங்கள் பலரும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல் நிலையை விசாரிப்பதில் தீவிரம் காட்டினர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்டோர் முதல்வர் நலம் பெற வேண்டி சிறப்பு யாகங்களை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்று வந்த செய்தி திரையுலகை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து போலீஸ் குவிப்பு, ஆங்காங்கே கலவரம், பூடகமாகவே வெளியான மீடியா செய்திகளால் கலக்கத்துக்குள்ளான திரையுலகினர், படப்பிடிப்புகளை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளனர். வெளியூர் படப்பிடிப்பில் உள்ள குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, அந்தந்த பகுதியிலேயே தங்கியுள்ளனர்.
சென்னையிலும் பெருமளவு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











