திண்டுக்கல்லுக்கு கிளம்பும் விஷால் டீம்... 'சண்டக்கோழி 2' முதல்கட்ட ஷூட்டிங் ஓவர்!
சென்னை : விஷால் நடித்த 'சண்டக்கோழி' திரைப்படம் பெரிய வெற்றி அடைந்தது. விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் அது. அந்தப் படத்தை லிங்குசாமி இயக்கினார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதையும் லிங்குசாமியே இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.

பின்னி மில்லில் மதுரை நகரின் கடைவீதி, கோவில், மார்க்கெட் போன்றவை செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி விதிப்பு பிரச்னை, திரையுலக போராட்டம், பைனான்சியர் அன்புச்செழியன் பிரசினைகள் காரணமாக அவ்வப்போது தடைபட்டு வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. சுமார் 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
'சண்டக்கோழி 2' படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் வரும் 22-ம் தேதி முதல் திண்டுக்கல் பகுதியில் நடைபெற இருப்பதாக தயாரிப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. கொடைக்கானல் பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் 20 நாட்கள் வரை நடக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











