சர்ச்சைக்குரிய காட்சிகள்.... பிரபல இயக்குநர் மீது தாக்குதல்... அடித்து நொறுக்கப்பட்ட படப்பிடிப்பு!
சர்ச்சைக்குரிய காட்சிகளை படமாக்கியதாகக் கூறி பிரபல இந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை ஒரு கும்பல் தாக்கியது. படப்பிடிப்பு நடந்த இடத்தையும் அடித்து நொறுக்கியது.
பெரும் வெற்றிப் பெற்ற பாஜிராவ் மஸ்தானிக்குப் பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் படம் பத்மாவதி. ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாறு இது. பத்மாவதியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

ஜெய்ப்பூரில் 'பத்மாவதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும் அலாவுதின் கில்ஜியும் காதல்வயப்பட்டுள்ளதாக சில காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டக்காரர்கள் செட்டிற்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கினர்.
செட்டில் இருந்த கேமரா உள்ளிட்ட கருவிகளை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியைப் பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
"வரலாற்றை தவறாகக் காட்ட வேண்டாம் என்று நாங்கள் பன்சாலியை எச்சரித்தோம். ஷூட்டிங் நடைபெறுவதை அறிந்து இங்கு வந்து எதிர்ப்பைத் தெரிவித்தோம்," என்று ராஜ்புத் கர்னி சேனாவைச் சேர்ந்த நாராயண் சிங் தெரிவித்தார்.
இந்த களேபரத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மும்பை கிளம்பினார் சஞ்சய் லீலா பன்சாலி.


Click it and Unblock the Notifications











