சத்யராஜ் படப்பிடிப்பில் பாமக ரகளை
தங்கர் பச்சான் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த படப்பிடிப்பின்போது பாமக சின்னமான மாம்ழபத்தை அழித்து விட்டதால் பாமகவினர் கொதிப்படைந்து படப்பிடிப்பின்போது பெரும் ரகளையில் ஈடுபட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
தங்கர்பச்சான் தான் எழுதிய 9 ரூபாய் நோட்டு கதையை படமாக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடந்தது.பத்திரக்கோட்டை என்ற கிராமத்தில் படப்பிடிப்பை நடத்தினார் தங்கர். அப்போது ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்த ஒரு சுவரில் பாமக தேர்தல் சின்னமான மாம்பழம் வரையப்பட்டிருந்தது. அதை படக்குழுவினர் அழித்து விட்டனர்.
அவ்வளவுதான் தகவல் அறிந்ததும் பாமகவினர் பெரும் திரளாக அங்கு வந்தனர். சின்னத்தை எப்படி அழிக்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் சின்னத்தை மறுபடியும் வரைந்து தர வேண்டும் என்று கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை களேபரமாகி வருவதை உணர்ந்த படக்குழுவினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பாமகவினரை அமைதிப்படுத்தியும் முடியவில்லை.
படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு படக்குழுவினருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்புடன் சத்யராஜ் உள்ளிட்டோர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. படப்பிடிப்பு தொடர்ந்து இந்தப் பகுதியில் நடக்குமா அல்லது வேறு பகுதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications











