தயாரிப்பாளர்கள்-பெப்சி மோதல்: 11 படங்களின் ஷூட்டிங் ரத்து!
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள சம்பளப் பஞ்சாயத்து காரணமாக 11 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு அவை ரத்து செய்யப்பட்டன.
தமிழ்த் திரையுலகில் புதிதாக ஒரு பஞ்சாயத்துக் கிளம்பியுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இதையடுத்து பொதுக்குழுவைக் கூட்டிய தயாரிப்பாளர்கள், பெப்சி உதவி எங்களுக்குத் தேவையில்லை, அவர்கள் இல்லாமல் தொழில் நடத்துவோம், யாரை வைத்தும் படப்பிடிப்பை நடத்துவோம், இனிமேல் ஒப்பந்தமே கிடையாது என்று அதிரடியாக அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று கூடிய பெப்சி கூட்டத்தில் தயாரிப்பாளர்களின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் இறுதியில், ஊதிய உயர்வைக் கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், முடிவு வரும் வரை போராட்டத்தைத் தொடருவது என்றும் அவர்கள் தீர்மானித்தனர்.
இந்த மோதல் தொடர்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 11 தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள், பெப்சியின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படஜ்டன. அதில் முக்கியமானது சூர்யாவின் மாற்றான், ஜீவாவின் முகமூடி, கார்த்தியின் சகுனி.
தற்போதைய ஊதியத்தில் பணியாற்ற முடியாது, உயர்த்தப்பட்ட ஊதியம் தந்தால்தான் பணியாற்றுவோம் என்று திரைப்படத் தொழிலாளர்கள் கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனராம்.
நேற்று கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெறவிருந்த சுந்தர்.சியின் மசாலா கேப் என்ற படத்தின் ஷூட்டிங்கும் இதே காரணத்திற்காக நடைபெறவில்லை. இன்றும் கூட படப்பிடிப்பு நடக்காது என்கிறார்கள்.
11 படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக செய்திகள் கூறினாலும் 26 படங்களின் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளதாக பெப்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன கேட்கிறார்கள் தொழிலாளர்கள்?
கடந்த வெள்ளிக்கிழமையன்று பெப்சி அமைப்பு தனது தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விகிதத்தை அறிவித்தது. இதை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் இதைச் செய்திருக்கக் கூடாது என்றது தயாரிப்பாளர் சங்கம்.
ரூ. 500க்கும் குறைவான நாள் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது பெப்சி. திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் வரை ஒரு நாளைக்கு ரூ. 500 முதல் 1000 வரைக்குள் வாங்குபவர்கள் ஆவர். 35 சதவீதம் பேர் மட்டுமே ரூ. 1000க்கு மேல் வாங்குபவர்கள் ஆவர் என்பது பெப்சியின் வாதமாகும்.
ஊதிய உயர்வை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்காததே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்.
அடுத்து முதல்வரைப் பார்க்கும், முறையிடும், குறை கூறும் படலம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல்வர் இதில் தலையிடும் வாய்ப்பு குறைவு என்கிறாகள்..!


Click it and Unblock the Notifications











