ஒத்தப்பாட்டுக்கு திருமா. ஆட்டம்!
ஒத்தப் பாட்டுக்கு வந்துபோகும் நடிகை, நடிகர்கள் வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் இணைகிறார். மன்சூர் அலிகான் இயக்கி, தயாரித்து, நடிக்கும் என்னைப் பார் யோகம் வரும் படத்தில் ஒரு பாட்டுக்கு திருமாவளவன் ஆட்டம் போடுகிறாராம்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்காரர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் திருமாவளவன். தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறி தொடர் போராட்டங்களை நடத்திக் கலக்கியவர்.ஆனால் அவரே கடைசியில் கோலிவுட் குளத்தில் குதித்து அன்புத்தோழி என்ற முத்தெடுத்து முழு நேர நடிகராக மாறி வருகிறார். அன்புத்தோழி படத்தில் போராளி வேடத்தில் நடித்துள்ளார் திருமா. இந்தப் படத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தால் சினிமா குறித்த தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு விட்டார் திருமா.
சினிமாவில் நடிப்பதும், அதைத் தயாரிப்பதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன் என்று வெளிப்படையாகவே சினிமாக்காரர்களின் சிரமங்களை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து நடிப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.
அன்புத் தோழியில் முதலில் கெளவர வேடத்தில் தான் நடிக்க ஒப்புக் கொண்டார் திருமா. ஆனால் இப்போது ஹீரோ ரேஞ்சுக்கு அவரது கேரக்டரை டெவலப் செய்து விட்டனராம்.
தொடர்ந்து நடிப்பேன் என்று திருமா கூறியதும் ஏராளமான தயாரிப்பாளர்கள் அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க அணுகி, சென்னை கே.கே. நகரில் உள்ள திருமாவளவனின் அலுவலகத்தை மொய்த்த வண்ணம் உள்ளனராம்.
தங்களது படங்களின் ஸ்கிரிப்பட்டை திருமாவிடம் காட்டி, அண்ணே கண்டிப்பா நடிக்கணும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்களாம். அப்படி அணுகியவர்களில் ஒருவர்தான் மன்சூர் அலிகான். வினோத வில்லனாக அறியப்பட்டு பிரபலமாகி, பின்னர் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீேரா என கலக்கி வருபவர் மன்சூர்.
இப்போது என்னைப் பார் யோகம் வரும் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, தயாரித்து, தானே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கன்னடத்துப் பைங்கிளி மஞ்சுதான் இதில் ஹீரோயின். படு கிளாமராக நடித்து வரும் மஞ்சுவை, வைத்து பல கிளாமர் கிளுகிளுப்புக் காட்சிகளை சுட்டு வருகிறார் மன்சூர். அபிநயஸ்ரீயும் படத்தில் உண்டு.
இந்தப் படத்தில் ஒரு புரட்சிப் பாட்டை வைக்க முடிவு செய்த மன்சூர், அதில் திருமா ஆடிப் பாடி நடித்தால் அமர்க்களமாக இருக்கும் என முடிவு செய்தார். இதற்காக திருமாவை அணுகினார். பாட்டையும் அவருக்குப் போட்டுக் காட்டினார்.
அதைக் கேட்டு அசந்து போன திருமா, அதில் பாடி நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார். சொன்னதோடு நிற்காமல் நடித்தும் கொடுத்து விட்டாராம்.
சிறுத்தையே என் படத்தில் நடிச்சிருச்சுய்யா என்று திரையுலகினரிடம் பெருமையாக சொல்லி வருகிறாராம் மன்சூர்.


Click it and Unblock the Notifications











