திரைத் துளி
தமிழில் காமடி கிங்காக கோலோச்சி வரும் வைகைப் புயல் வடிவேலு, கேரளக் கரைகளையும் கலகலக்கப் போகிறார்.
சுருளி ராஜன், கவுண்டமணி பாணியில் லோக்கல் பாஷையில் காமடி செய்யும் வடிவேலு, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமடியனகாக தொடர்ந்து சில ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஹீரோ வேஷம் கட்டப் போய்விட்ட விவேக்கின் காமெடி மார்க்கெட் சற்று டல்லாக இருப்பதால், வடிவேலு இல்லாத தமிழ்ப் படமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
கைகொள்ளாத அளவுக்கு ஏகப்பட்ட படங்களை வைத்துக் கொண்டு கால்ஷீட் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
இதனால் கவுண்டமணி மாதிரி தனது சம்பளத்தை நாளுக்கு இவ்வளவு என்று மாற்றிவிட்டார். அதே நேரத்தில் தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு ஏகப்பட்ட சலுகையும் தருகிறார் சம்பள விஷயத்தில்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தனது படங்களில் வடிவேலுக்கு நல்ல முக்கியத்துவம் தந்தார். இப்போது உதயகுமாருக்கு கஷ்ட காலம். தான் இயக்கி வரும் கற்க கசடறவிலும் வடிவேலுவை புக் செய்தார். வடிவேலுவிடம் சம்பளம் குறித்து உதயகுமார் வாய் திறக்க, சம்பளமே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
ஆனந்த அதிர்ச்சியடைந்திருக்கிறார் உதயகுமார். சினிமாவுல இப்படி ஒரு ஆளா என்ற ஆச்சரியம்.
இப்போது ரஜினியின் சந்திரமுகியிலும் வடிவேலுவுக்கு வெயிட்டான ரோலாம். வடிவேலுவுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்ட ரஜினி, அவருக்கு நிறைய சீன்களை சேர்க்கச் சொல்லிவிட்டாராம். புளகாங்கிதமடைந்திருக்கிறார் வடிவேலு.
இந் நிலையில் மலையாளப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் வடிவேலு. "மந்த்ர த்வனி" என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் வடிவேலுவுடன் செந்திலும் சேர்ந்து கலாய்க்கவுள்ளார். இருவரும் தமிழிலேயே பேசி நடிக்கவுள்ளார்களாம்.
தமிழில் நடிப்பதைப் போலவே இதிலும் இயல்பான காமடியில் வடிவேலுவை நடிக்கச் சொல்லியுள்ளார்களாம். வெறும் காமடி மட்டும் செய்யாமல் நெகிழ வைக்கும் சில காட்சிகளும் வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ளதாம்.
நடிகை ஊர்வசியின் வூட்டுக்காரரான மனோஜ் கே ஜெயன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீவித்யாவும் இருக்கிறார். படத்தை இயக்கப் போவது சுனில் பிரபு. (ஸ்ரீவித்யா ரொம்ப காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ ஆஸ்ரமம் பக்கமாக அடிக்கடி ஒதுங்கிவிடுகிறார்).
தமிழ் காமடியில் "கம்பாக" நிற்கும் வடிவேலு, மலையாளிகளை மயக்குவாரா?


Click it and Unblock the Notifications











