டி.எம்.எஸ்சுக்கு அழகிரியின் பாராட்டு விழா-கருணாநிதி பங்கேற்பு

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு மதுரை புதுநத்தம் சாலையில் சந்திப்பில் (பாண்டியன் ஓட்டல் பின்புறம்) முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சிறப்பு விழா நாளை காலையில் நடைபெறுகிறது.
மாலை தமுக்கம் மைதானத்தில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சௌந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மு.க.அழகிரி செய்துள்ளார்.
இந்த இரு விழாக்களிலும் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மாலை தூத்துக்குடியி்ல் இருந்து மதுரை வருகிறார். அவருக்கு மதுரை தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.
வரவேற்று நிகழ்ச்சிக்குப் பின்னர் காலையில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலையை திறந்து வைத்துப் பேசுகிறார்.
மாலையில் டி.எம்.சௌந்திரராஜனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார். விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விசுவாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
டி.எம்.சௌந்திரராஜன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
மதுரையில் பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே முதல்வரின் வருகையையொட்டி மதுரையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல தீவிரவாதிகள் பிடிபட்டுள்ள நிலையில் முதல்வர் தூத்துக்குடி, மதுரையில் பயணம் மேற்கொண்டுள்ளதால் சுமார் 3,000 போலீசார் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் விழாவில் இன்று அவர் பங்கேற்கிறார்.


Click it and Unblock the Notifications











