வைரமுத்து சொன்னால் படம் ஓடும்-கமல்ஹாஸன்

சுந்தர் இயக்கும் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முதல்வருடன் மேடையேறிய கமல்ஹாஸன் பேசியது:
"சுந்தர் சி. குறிப்பிட்டது போல் வைரமுத்து அரவணைத்த இயக்குநர்களில் நானும் ஒருவன்.
நான் எழுதிய கவிதைகளை, அவரிடம் காட்டி பிழைகளை திருத்திக் கொண்டிருக்கிறேன். கலைஞர் வசனங்களை மனப்பாடம் செய்ததுபோல், வைரமுத்துவின் கவிதைகளையும் மனப்பாடம் செய்து இருக்கிறேன்.
பிற்காலத்தில், அந்த கவிதை எழுதியவர் என் படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று கேட்டு இருக்கிறேன். அப்போது ஏற்பட்ட நட்பு, வைரமுத்துவுடன் இன்னும் தொடர்கிறது. மேலும் தொடரும்.
இப்போது இந்த மேடையில் சந்திப்பது போல், எப்போது வேண்டுமானாலும் மிக சுலபமாக சந்திக்க முடிகிற முதல்வர், கலைஞர். இப்படி ஒரு முதல்வர் மற்ற மாநிலங்களில் இருப்பார்களா என தெரியாது. இவர், எங்களில் ஒருவராக இருக்கிறார்.
வைரமுத்து, சிறந்த திறனாய்வாளர். அவர் ஒரு படம் ஓடும் என்று சொன்னால் ஓடும். இந்த படத்தை அவர் பார்த்து விட்டு, வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார். அதனால், படம் நிச்சயமாக வெற்றி பெறும்...'' என்றார் கமல்.
நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து பேசும்போது, "சுந்தர் சி. புத்திசாலி. குஷ்புவை திருமணம் செய்ததால், அவர் அதிர்ஷ்டசாலி. இளம் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும்போது, பாடல்களின் வரிகள் கேட்கிற மாதிரி இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு நன்றி தெரிவித்து பேசியது:
"நான் தயாரித்த முதல் படம், 'கிரி.' ஒரு நடிகை படம் தயாரித்தால் ராசியிருக்காது என்று அப்போது பேசினார்கள். ஆனால், கிரி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து நான் படம் தயாரித்து வருகிறேன். 'நகரம்' என் தயாரிப்பில், 5-வது படம்.
என் கணவர், 'தலைநகரம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அவர் கதாநாயகனாக நடிப்பது முதலில் எனக்கு தெரியாது. மிக தாமதமாகத்தான் எனக்கு தெரியவந்தது. முதல் படத்திலேயே நடிப்பில், அவர் வெற்றி பெற்றார். இந்த படம் வெற்றி பெற்றால், அதற்கு முழு காரணம் சுந்தர்தான்...,'' என்றார்.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் கதாநாயகி அனுயா, இசையமைப்பாளர் தமன் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











