செந்தில் மகனுக்கு 'அம்மா' வாழ்த்து!

நடடிகர் செந்திலின் மகன் மணிகண்டபிரபுவுக்கும், ஜனனி பிரிய வந்திதாவுக்கும் சமீபத்தில் மதுரையில் திருமணம் நடந்தது.
நேற்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
செந்தில் அதிமுகவில் இருந்தாலும் கூட, அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே செந்தில் மகன் கல்யாணத்திற்கு ஜெயலலிதா வர மாட்டார் எனக் கூறப்பட்டது. செந்திலும் கூட ஜெயலலிதாவின் வருகை குறித்து செய்தி எதுவும் போட வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்ைக விடுத்திருந்தார்.
திருமணத்திற்குத்தான் வரவில்லை. வரவேற்புக்காவது வருவாரா ஜெயலலிதா என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் போல செந்திலுக்கும் இருந்தது.
ஆனால் செந்திலுக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் வகையில் ஜெயலலிதா முதல் ஆளாக வந்து அசத்தி விட்டார்.
பெரிய மலர்க்கொத்தும், பரிசும் கொடுத்து புதுமணத் தம்பதியை ஜெயலலிதா ஆசிர்வதித்தார். சுமார் கால் மணி நேரம் அமர்ந்திருந்து கல்யாணம் எப்படி நடந்தது என்று செந்திலிடம் விசாரித்தார். திருமணத்திற்கு வர முடியாததையும் செந்திலிடம் ஜெயலலிதா விளக்கினார்.
பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அம்மா வந்து தனது மகனையும், மருமகளையும் ஆசிர்வதித்தது செந்திலுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வரவேற்புக்கு வந்திருந்தவர்களிடம் அதைச் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுப் போனார் செந்தில்.


Click it and Unblock the Notifications











