குசேலன்: இந்தியில் கூடாது-ப்ரியதர்ஷன்

குசேலன் படத்தின் மூலமான கத பறயும்போள் மலையாளப் படத்தின் இந்தி உரிமையைப் பெற்றுள்ள ப்ரியதர்ஷன், ஷாரூக்கானை வைத்து அதை பில்லூ பார்பர் எனும் பெயரில் இந்தியில் இயக்கி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் வேடத்தில் இதில் நடிப்பவர் ஷாரூக்கான். பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படப்பிடிப்பின் இடையே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ரஜினியின் குசேலன் படம் பார்த்தேன். ஒரிஜினல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் சற்று வித்தியாசங்கள் உள்ளன. ரஜினி ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளனர். ஆனால் நான் எடுக்கும் பில்லூ பார்பரில் ஷாரூக்கானை ரஜினி அளவுக்கு உயர்த்திக் காட்டும் எண்ணமில்லை.
ரஜினிக்கு அது சரியாக இருக்கும். ஷாரூக்கானுக்கு அது பொருந்துமா என்ற சந்தேகம் உள்ளது. என் படத்தின் நாயகன் ஷாரூக் அல்ல.
இப்போது குசேலன் படத்தை இந்தியில் டப் செய்து விடப்போவதாகக் கூறுகிறார்கள். தமிழ், தெலுங்குக்கு மட்டும்தான் கவிதாலயாவும், செவன் ஆர்ட்ஸும் உரிமம் பெற்றுள்ளனர். இந்தி உரிமை ஷாரூக்கானுக்கு விற்கப்பட்டு விட்டது. குசேலன் தமிழ் பதிப்பையே போதுமான அளவு வட இந்திய திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர்.
இதில் குசேலனை இந்தியிலும் டப் செய்வது ஒப்பந்த்துக்கு எதிரானது, என்றார் ப்ரியதர்ஷன்.
ஏற்கெனவே, மணிச்சித்ரதாழு மலையாளக் கதையை ரீமேக் செய்வதில் வாசுவுக்கும் ப்ரியதர்ஷனுக்கும் கடுமையான மோதல் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளக் கதையின் தழுவல்தான் சந்திரமுகி என்றாலும் ரஜினிக்காக நிறைய மாற்றியிருந்தார் வாசு.
ப்ரியதர்ஷன் தனது 'பூல் புலைய்யா'வில், சந்திரமுகியை அப்படியே அப்பட்டமாகக் காப்பியடித்துவிட்டதாக குற்றம் சாட்டி வக்கீல் நோட்டீசும் அனுப்பினார் வாசு என்பது நினைவிருக்கும்.
ரீமேக்குக்கு இவ்வளவு சண்டையா!


Click it and Unblock the Notifications











