தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ராம.நாராயணன் அணி வெற்றி

துணைத் தலைவராக ராமநாராயணன் அணியைச் சேர்ந்த அன்பாலயா கே.பிரபாகரனும், செயலாளராக அதே அணியைச் சேர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரனும் முறையே 340 மற்றும் 310 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்களின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. விரிவான விபரங்கள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் ராம நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி என்ற பெயரில் ஒரு அணியும், இன்னொரு புறம், பஞ்சு அருணாச்சலம் தலைமையில்ஜனநாயக முற்போக்கு அணி என்ற இன்னொரு அணியும் மோதின.
பஞ்சு அருணாச்சலம் அணியில், நடிகை ராதிகா, செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்.
ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு கவுரவ செயலாளர்கள், ஒரு பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற்றது.
தேர்தல் அதிகாரியாக மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.வரதன் நியமிக்கப்பட்டிருந்தார். உதவி தேர்தல் அதிகாரிகளாக பார்த்திபன், சந்திரகுமார் ஆகியோர் செயல்பட்டனர்.
இன்று காலை 9 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் தேர்தல் துவங்கியது.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராம நாராயணன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் 9 மணிக்கு தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தயாரிப்பாளர் - ராதிகா மோதல்
செயலாளர் பதவிக்கு போட்டியிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் ஓட்டு போட்டனர். நடிகை ராதிகா ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி.பிலிம்ஸ் பாலு ஓட்டு போடுவதற்காக உள்ளே வந்தார்.
இவர் தேர்தல் பிரசாரத்தின்போது ராதிகாவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார். ராதிகா தமிழ்ப் பெண் அல்ல, அவர் சிங்களப் பெண் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனால் கோபத்துடன் இருந்த ராதிகா, பாலுவைப் பார்த்ததும் அவரை நிறுத்தி அவரிடம் கடும் வாக்குவாதம் புரிந்தார். பதிலுக்கு பாலுவும் பேசினார். அவருக்கு ஆதரவாக பலர் திரண்டனர்.
இதையடுத்து ராதிகாவுக்கு ஆதரவாக சரத்குமார், ராதாரவி, பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டோர் திரண்டனர். வேகமாக பேசிய ராதிகா, எனது தந்தை எம்.ஆர். ராதா ஒரு பச்சைத் தமிழன். அப்படி இருக்கையில், என்னை எப்படி சிங்களப் பெண் என்று கூறலாம் என்று கோபமாக கேட்டார். பதிலுக்கு பாலுவும் ஏதோ கூறினார்.
இதனால் அங்கு பெரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமானது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பிரித்து அமைதிப்படுத்தினர். இதனால் பெரும் அடிதடி, ரகளை தவிர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பாலயா பிரபாகரன், கே.முரளிதரன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், அழகன் தமிழ்மணி, வி.சி.குகநாதன், கோவை தம்பி, நடிகை குஷ்பு, மாதேஷ், மனோஜ் குமார், எடிட்டர் மோகன், சங்கலி முருகன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், பி.எல். தேனப்பன், டி.ஜி.தியாகராஜன், விஜய முரளி, பாபு கணேஷ், ஏ.எம்.ரத்தினம், ராதா கிருஷ்ணன், பாரதி கண்ணன், வி.ஏ.துரை, ஞானவேல் ராஜா, ஹென்றி, கமீலா நாசர் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.


Click it and Unblock the Notifications











