விஜய்காந்த்தை எதிர்த்து நிச்சயம் பிரசாரம் - வடிவேலு

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீட்டில் சில மாதங்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் கும்பலாக வந்த சிலர் கல்வீசி அடித்து நொறுக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது விஜயகாந்தின் திட்டமிட்ட சதி என்றும், அவர்தான் அடியாட்களை அனுப்பி என் வீட்டை கல்வீசி தாக்கினார் என்றும் நடிகர் வடிவேல் போலீசில் புகார் செய்தார்.
தற்போது அதுகுறித்த வழக்கு நடந்து வருகிறது. இதற்கு முன்பும் வடிவேலுக்கும் விஜய்காந்த் ஆட்களுக்குமிடையே கடும் மோதல் நடந்தது.
'வண்டு' முருகன்
இந்நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த எல்லாம் அவன் செயல் பட பிரஸ் மீட்டில் நிருபர்களைச் சந்தித்தார் வடிவேலு.
இந்தப் படத்தில் அவர் வண்டு முருகன் என்ற அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அதில், குறிப்பாக ஒரு காட்சியில் விஜய்காந்தைத் தாக்குவதுபோல் வசனம் அமைந்திருக்கிறது.
என் வீட்டில் கல்வீச்சு சம்பவம் நடந்ததற்கும், 'எல்லாம் அவன் செயல்' படத்தில் நான் அரசியல்வாதியாக நடித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பே எல்லாம் அவன் செயல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
ஆனால் என் வீட்டை கல்வீசி அடித்து உதைத்த சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அந்த வலியும், பதற்றமும் என்னை விட்டு இன்னும் போகவில்லை. என் மனைவியும், குழந்தைகளும் இன்னும்கூட பதற்றமாகவே இருக்கிறார்கள்.
இதற்கு காரணமான விஜயகாந்தை எதிர்த்து அவர் எந்த தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சியை எதிர்த்து, நான் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்வேன்.
இன்னாருக்கு ஆதரவான பிரச்சாரம் என்று அதைப் பார்க்கத் தேவையில்லை. தேர்தல் என்று அறிவிப்பு வந்தால், நான் பாட்டுக்குக் கிளம்பிப் போய்கிட்டே இருப்பேன். சூறாவளிப் பிரச்சாரம்தான்.
பதவி ஆசையில்லை!
நான் எம்.பி. ஆகவேண்டுமென்றோ, எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றோ ஆசைப்படவில்லை. எனக்கு நடந்த கொடுமைகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இப்போதும் எனக்கு விஜயகாந்த் ஆட்களிடமிருந்து தினமும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தினமும் 4 டெலிபோன் மிரட்டலாவது வருகிறது. அடிச்சுக் கொன்னுடுவோம்னு மிரட்டறாங்க. இதையெல்லாம் போலீசுக்கு கொண்டு போக விரும்பவில்லை. அப்புறம் தினமும் போலீஸ் ஸ்டேசனே கதின்னு கிடக்கணும். அவ்வளவு அக்கிரமம் பண்றாங்க..
மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் தான் என் கடவுள். மக்களை சிரிக்க வைக்கிற என்னை, அவர்கள் சிரிக்க வைப்பார்கள் என்றார் வடிவேலு.


Click it and Unblock the Notifications











