ரஜினியின் எந்திரன்... 100 நாள் சாதனை!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 100 வது நாளைத் தொட்டிருக்கிறது.
இன்றைக்கு திரைப்பட உலகம் உள்ள சூழலில் 100 நாட்கள் ஒரு படம் ஓடுவதே பெரிய சாதனைதான்.
ஆனால் எந்திரன் படம் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 3000 திரையரங்குகளில் வெளியானது உலகம் முழுக்க. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 600 திரையரங்குகள் என்று சொல்லப்பட்டாலும், முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. ஒரு தியேட்டர் காம்ப்ளெக்ஸில் 6 திரையரங்குகள் இருந்தால், அதில் 5-ல் எந்திரனை வெளியிட்டனர். மாயாஜாலின் 10 திரையரங்குகளில் தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 60 காட்சிகள் வீதம் ஓட்டி வசூலை அள்ளினர்.
எந்திரனின் அதிகாரப்பூர்வ வசூல் தொகை ரூ 400 கோடி என சன் நெட்வொர்க் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. வெளிநாடுகளில் மட்டும் எந்திரன் வசூல் ரூ 70 கோடி என அறிவித்துள்ளது இந்தப் படத்தை வெளியிட்ட அய்ங்கரன் நிறுவனம். அதாவது சிறப்புக் காட்சிகள், எக்ஸ்ட்ரா இருக்கைகள், முதல் மூன்று வாரங்கள் கூடுதலாக திரையிடப்பட்ட திரையரங்குகள், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றை தவிர்த்து, அரசுக்குக் காட்டப்பட்டுள்ள கணக்குப்படி ரூ 400 கோடி!
இத்தனையையும் தாண்டி இந்தப் படம் 100 நாட்களை 6 நாடுகளில் கடந்துள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் எந்திரன் இந்த சாதனையைப் படைத்துள்ளது.
தெலுங்கில் ரூ 40 கோடி வரை இந்தப் படம் குவித்துள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகத்தில் இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வசூலில் மட்டுமல்ல, தரத்திலும் முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











