'மக்களுக்கு நல்லது செய்தால், அவர்கள் இதயத்தையே தருவார்கள்' - ரஜினி

நைஸ் (Nandi Infrastructure Corridor Enterprises) நிறுவன நிர்வாக இயக்குநர் அசோக் கேனியின் 60-வது பிறந்த நாள் திங்கள்கிழமை மைசூரில் நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, அசோக் கேனியை வாழ்த்திப் பேசினார். முழுக்க முழுத்த கன்னடத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த விழாவில் ஏராளமான சாமியார்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர். இதை பார்க்கவே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. இது சாமியார்களின் கூடுகையோ என்று கூட நினைக்க தோன்றுகிறது. சாமியார்கள் அனைவருக்கும், கூடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாமியார்கள் இறைவனுக்கு உதவியாளர்கள் போன்றவர்கள். நாம் சாமியார்களை வணங்கி வேண்டிக் கொண்டால், அவர்கள் நமக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தால், கடவுள் நமக்காக எல்லாம் செய்வார்.
இதயத்தைக் கொடுப்பார்கள்...
அசோக் கேனி அமெரிக்காவில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். ஆனால், அவர் அந்த வாழ்க்கையை விட்டுவிட்டு, பிறந்த நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு வந்து சமூக சேவையாற்றி வருகிறார். அதன்மூலம் ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இருக்கிறார்.
அவர் அரசியல்வாதி அல்ல, சினிமா நடிகர் அல்ல, பிரபல விளையாட்டு வீரரும் அல்ல... ஆனாலும் அவர் இவ்வளவு அதிக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டதற்குக் காரணம் அவர் சமுதாயத்துக்கு செய்து கொண்டிருக்கும் நல்ல சேவைகள்தான். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அப்படி நல்லது செய்பவர்களுக்கு மக்கள் தங்களது இதயத்தையே கொடுப்பார்கள்..." என்றார் ரஜினி.
திரண்ட ரசிகர்கள்...
இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் அம்பரீஷ் ஆகியோருக்கு அசோக் கேனி நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், விசுவநாத் எம்.பி., சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, பேஜாவரா மடாதிபதி விஸ்வேசுவர தீர்த்த சுவாமி மற்றும் 100-க்கும் அதிகமான சாமியார்கள் கலந்து கொண்டனர். மேலும் ரஜினிகாந்த்தை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











