நார்வேயில் பட விழாவில் தமிழ்ப் படைப்பாளிகள் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜனநாதன்!

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் முதல் திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழா கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துவங்கியது. நாளை வரை நடக்கிறது.
உலகிலேயே முதல் முறையாக தமிழர்களால், தமிழ்ப் படங்களுக்கென்று நடத்தப்படும் திரைப்பட விழா இதுவே.
கவிஞர் வசீகரன் சிவலிங்கத்தின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நடத்தும் இந்த திரைப்பட விழாவில் சுப்பிரமணியபுரம், நாடோடிகள், பூ, பேராண்மை, நந்தலாலா, யோகி உள்ளிட்ட 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சுப்பிரமணியபுரம் படத்தின் ஹீரோவும் இயக்குநருமான சசிகுமார், நாடோடிகள் இயக்குநர் சமுத்திரக்கனி, பேராண்மை இயக்குநர் எஸ் பி ஜனநாதன் மற்றும் நந்தலாலா இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நார்வே சென்றுள்ளனர்.
அவர்களை வசீகரன் நேரில் சென்று வரவேற்று விழா அரங்குக்கு அழைத்துச் சென்றார்.
ஏராளமான தமிழ் பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
இந்த விழா பற்றி இயக்குநர் சசிகுமார் கூறுகையில், "எனக்கு புதிய படத்தின் ஷூட்டிங் இருந்ததால் இந்த விழாவுக்கு போக முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தமிழர்களுக்காக தமிழர்களால் நடத்தப்படும் முழு தமிழ் திரைப்பட விழா இது என்பதைக் கேட்டதும், நான் வந்துவிட்டேன். இதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
சுப்பிரமணியபுரம் மற்ற படவிழாக்களில் பங்கேற்றதற்கும், இங்கே பங்கேற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்குதான் முழுமையான நிறைவு கிடைத்துள்ளது" என்றார்.
இயக்குநர் சமுத்திரக் கனி கூறுகையில், "நார்வேயை நான் வரைபடத்தில் பார்த்தோடு சரி. இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நமது சொந்தங்களைப் பார்க்க வந்திருக்கும் மகிழ்ச்சி எனக்கு.
இந்த நாட்டில் வசிக்கும் நம்ம சொந்தங்களைப் பார்த்து, அவர்கள் மத்தியில் எங்கள் படைப்புகளைப் பற்றி விவாதிக்க இத்தனைப் பெரிய வாய்ப்பை வழங்கிய என் நண்பன் வசீகரனுக்கு நன்றிகள்" என்றார்.
திரைப்பட விழாவில் இன்றைய படங்கள்:
13.00 பிற்பகல் - சுப்ரமணியபுரம்
16.00 மாலை - யோகி
19.00 மாலை - பசங்க
21.40 இரவு - நாடோடிகள்
பிப்ரவரி 9
16.00 மாலை - நந்தலாலா
விழா நிறைவு நிகழ்ச்சிகள்.


Click it and Unblock the Notifications











