முதல்வருடன் ரஜினி-கமல் ஆலோசனை: திருட்டு வி.சி.டி வைத்திருந்தால் குண்டர் சட்டம்!

By Staff

Kamal, Rajni and Karunanithi
சென்னை: திருட்டு வி.சி.டியை ஒழிக்க முதல்வர் கருணாநிதி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரை உலக பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருட்டு வி.சி.டி. தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மட்டுமின்றி அதை வைத்து இருப்போர் மீதும் இனி குண்டர் சட்டம் பாயும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ராதிகா தயாரிப்பில், நடிகர் சரத்குமார்-ஸ்ரேயா நடித்து, கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்துள்ள புதிய படம், 'ஜக்குபாய்' திரைக்கு வரும் முன்பே இன்டர்நெட்டில் வந்துவிட்டது. டிவிடி வடிவில் தெருக்களில் லோல்படுகிறது.

தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே ஒரு படம் இந்த வழியில் வெளியாவது இதுவே முதல்முறை என்பதால் தமிழ் திரை உலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

முதல்வரைச் சந்தித்து ராதிகாவும் சரத்குமாரும் முறையிட்டனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

கோவை, சென்னை, ஒசூர் என பல ஊர்களில் திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்களைக் கைது செய்தது தமிழக காவல் துறை.

ரஜினி - கமல்

இந்த நிலையில் 'ஜக்குபாய்' பட விவகாரம் மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சினை தொடர்பாக முதலவர் கருணாநிதியை, திரையுலகினர் நேற்று மாலை கோட்டையில் சந்தித்துப் பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பிரபு மற்றும் தயாரிப்புத்துறை சார்பில் ஏவி.எம்.சரவணன், ராமநாராயணன், சிவசக்தி பாண்டியன், அபிராமி ராமநாதன், குகநாதன் ஆகியோர் திரையுலகம் சார்பில் கலந்துகொண்டார்கள்.

செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, உள்துறை செயலாளர் மாலதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், சட்டத்துறை செயலாளர் தீனதயாளன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம், காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஜாபர்சேட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருணாநிதியிடம் மனு

இந்த கூட்டத்தில், முதல்வரிடம் திரைத்துறையினர் மனு கொடுத்தார்கள். அதில்,
"தங்களால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் நாங்கள் அனுபவிக்க முடியாத நிலையில் திருட்டு வி.சி.டி. என்ற அரக்கன் தன் கோர தாண்டவத்தால் எங்களை அழுத்திக் கொண்டிருக்கிறான்.

பல ஆண்டு காலமாக இந்த அரக்கனை ஒழித்து எம்மை விடுவிக்க யாராலும் முடியவில்லை. தாங்கள் கருணை வைத்தால் மட்டுமே இந்த திருட்டு வி.சி.டி. என்ற அரக்கனை ஒழிக்க முடியும்.

அறுபது ஆண்டு காலத்துக்கும் மேலாக திரையுலகில் மூத்த கலைஞராய் திகழ்ந்து வரும் தாங்கள்தான் தமிழ் திரையுலகை காப்பாற்ற முடியும். வேறு யாராலும் நிச்சயம் முடியாது. திருட்டு வி.சி.டி. கும்பலை ஒழித்து, தங்கள் தாய் வீடான கலையுலகை காப்பாற்றுங்கள்" என்று கீழே கையொப்பமிடும் நாங்கள் அனைவரும் உங்களை இருகரம் கூப்பி பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...," என்று கோரியிருந்தனர்.

குண்டர் சட்டம்:

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

* திரைப்படங்களை ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளாக திருட்டுத் தனமாக விற்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய அரசின் 'காப்பி ரைட்'' சட்டம் 1957-ன்படி மேலே குறிப்பிட்டவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

* இந்த சட்டத்தின்படி விசிடி திருடர்களுக்கு குறைந்தபட்ச சிறைத் தண்டனையாக ஆறுமாதங்கள் கிடைக்க அரசின் சார்பில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* இந்த சட்டப்பிரிவுகளை மேலும் தீவிரமாக்குவதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் பரிந்துரை அனுப்பப்படும்.

* அரசின் சார்பில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே நேரத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மூலமாக இந்த திருட்டு வி.சி.டி.கள் பரவுவதற்கு வழிவகுக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (என்கிரிப்ஷன் உள்பட) அவர்களின் பல்வேறு பிரிவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X