'வைகை'யில் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...'!

சபேஷ் முரளி இசையமைக்க, சுந்தரபாண்டி இயக்குநராக அறிமுகமாகும், இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்றை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பயன்படுத்தியிருப்பது.
ராஜாவின் இசையில் ஒரு பாடலை கேட்கும்போதே, முடிவு செய்துவிடலாம், இந்தப் பாடலை வேறு எந்த வடிவிலும் மாற்ற முடியாது... அதன் முதலும் முடிவும் இப்படித்தான் இருக்கும் என்பதை.
அப்படிப்பட்ட பாடல்களை ரீமிக்ஸ் என மிக்ஸியில் போட்டு அடித்துக் கலக்கி குற்றுயிரும் குலையுயிருமாகத் தருவதை நவீன ட்ரெண்ட் என்று கூறிவருகின்றனர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள். இதில் இளையராஜாவின் மகன் யுவனும் அடக்கும் என்பது ஒரு வேதனையான உண்மை.
இந்த நேரத்தில் ராஜாவின் பாடல் ஒன்றை முழுமையாக தனது படத்தில் பயன்படுத்தியுள்ளாராம் சுந்தர பாண்டி.
அவர் கூறுகையில்,
"இசைமேதை இளையராஜாவின் இசையில் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலை, 'வைகை' படத்தில் ரீமிக்ஸாக வைக்க நினைத்தோம்.
'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலை எப்போது யார் எங்கே கேட்டாலும், பாடல் முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வார்கள்.
உலகின் உயர்தரமான எந்த இசைக் கருவிகளைக் கொண்டு மாற்றி இசையமைத்தாலும் கூட இப் பாடலை ரீமிக்ஸ் வடிவில் நம்மால் ரசிக்க முடியாது என்பதே உண்மை.
ராஜாவின் இசையை மீறி எந்த ஒரு சாதனையையும் எங்களால் செய்துவிட முடியாது என்பதால், அவரது பாடலை சிறு சேதாரமும் இல்லாமல் அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். ரீமிக்ஸ் என்ற பெயரில் அந்தப் பாடலைக் கெடுக்க விரும்பவில்லை. அதுதான் இளையராஜாவுக்கு நாங்கள் செய்யும் மரியாதை..." என்றார்.
இது ரீமிக்ஸ் பார்ட்டிகளுக்கும் புரிஞ்சா சந்தோஷம்தான்!


Click it and Unblock the Notifications











