கொல்லப்பட்டாரா சில்க் ஸ்மிதா?

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா என்ற மந்திரப் பெயர் ஏற்படுத்திய மாயாஜாலம் இன்றளவும் கூட சிலாகித்துப் பேசப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவிலலை என்பது திரையுலகின் தீர்ப்பு.
மறக்க முடியாத பல படங்களிலும், கிளாமர் வேடங்களிலும், பாடல் காட்சிகளிலும், நடனங்களிலும் கலக்கியவர் சில்க். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் தூக்கில் தொங்கினார் சில்க். ரசிகர்களின் மனதில் சோகம் தங்கியது, திரையுலகம் இனி இப்படி ஒரு நடிகையை எப்போது பெறப் போகிறோம் என்று ஏங்கியது.
சில்க் ஸ்மிதாவும், வதந்திகள், சர்ச்சகைளும் கூடப் பிறந்தவை போல. சில்க் உயிருடன் இருந்தபோதும் பல்வேறு வதந்திகள், சர்ச்சைகளில் சிக்கினார். அவருடன் நிழல் போல இருந்த தாடிக்காரர் குறித்து செய்தி போடாத இதழ்களே கிடையாது.
இப்போது சில்க் மறைந்து இத்தனை காலத்திற்குப் பிறகு புது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அது திடுக்கிடும் செய்தியாக இருப்பதுதான் முக்கியமானது.
சில்க் ஸ்மிதாவை வைத்து முதல் படத்தையும், கடைசிப் படத்தையும் இயக்கிய இயக்குநர் திருப்பதி ராஜாதான் இந்த புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
சில்க் நடித்த கடைசிப் படம் தங்கத்தாமரை. இதை திருப்பதிராஜாதான் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுத்து விட்டதால் இந்தப் படம் வெளி வர முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சில்க் குறித்து ஒரு சர்ச்சை புத்தகத்தை எழுதியுள்ளார் திருப்பதி ராஜா. அதில் சில்க் குறித்தும், அவரது மரணம் குறித்தும் எழுதியுள்ளார் திருப்பதி ராஜா.
சில்க்கின் முதல் தமிழ்ப் படம் வண்டிச்சக்கரம் இல்லையாம். திருப்பதி ராஜா இயக்கிய வீணையும், நாதமும் என்ற படம்தான் முதல் படமாம். அதை அவரேதான் தயாரித்துள்ளார். விஜயலட்சுமி என்ற இயற் பெயர் கொண்ட சில்க்கை, விஜயலட்சுமி என்ற பெயரிலேயே அந்தப் படத்தில் நடிக்க வைத்தாராம் திருப்பதிராஜா.
வண்டிச்சக்கரத்தில் சிலுக்கு என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானதால் அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயர் வந்து விட்டது.
சில்க் குறித்து திருப்பதிராஜா கூறுகையில், எனக்கும், சில்க்குக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தரங்கமாகவும் தொடர்பு இருந்தது. ஆனால் தாடிக்கார டாக்டர்தான் என்னை சில்க்கிடமிருந்து பிரித்து விட்டார். சில்க்கை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
நான் முதன் முதலில் சில்க்கை நடிக்க வைத்தபோது அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் ரூ. 16,000 தான். ஆனால் கடைசி காலத்தில் சில்க் கோடி வரை சம்பளம் வாங்கினார்.
அவரிடம் நான் 1995ம் ஆண்டு நான் சிரமத்தில் இருப்பதாக கூறி நடிக்குமாறு கோரினேன். அவரும் ஒத்துக் கொண்டார். அதுதான் தங்கத்தாமரை. ஆனால் படம் முடிவதற்குள்ளாகவே இறந்து விட்டார்.
ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மோசமான நிலையில் அவர் இல்லை. அவர் கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனக்கு சில்க் ஸ்மிதாவின் கடைசிக்காலம் நன்றாகவே தெரியும். அவர் எப்படி இறந்தார் என்பதற்கு எனது புத்தகம் பதில் சொல்லும்.
அவரது கடைசிக்காலத்தில் பல பிரச்சினைகள் அவருக்கு வந்தன. ஆனால் அவற்றை அப்போது என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் இப்போது சொல்ல முடியும். அதைத்தான் புத்தகத்தில் சொல்லியுள்ளேன். இது வெளியே வந்தால் பல முக்கியப் புள்ளிகள் தெருவுக்கு வருவார்கள் என்றார் திருப்பதிராஜா.
அப்படி புத்தகத்தில் என்னதான் இருக்கிறது ராஜா?


Click it and Unblock the Notifications











