twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபாகரின் மணி ஓசையை உணர வைத்த கற்றது தமிழ்..! - #10YearsOfKattradhuThamizh

    By Vignesh Selvaraj
    |

    'கற்றது தமிழ்' படம் வெளிவந்து இன்றோடு பத்து வருஷம் ஆகுது. சென்னையில வேலை பார்த்தப்போ என்னோட உயிர் நண்பர்கள் ரெண்டுபேரோட சேர்ந்து செகண்ட் ஷோ பார்த்துட்டு மிரண்டுபோயி அந்தப் படத்தை பத்தி பேசிக்கிட்டே ரூம் வரைக்கும் ஆறு கி.மீ நடந்தே வந்தது இப்போ பசுமையா ஞாபகம் இருக்கு. ஏன்னா இந்தப் படத்தை பத்தி பேசுறததுக்கு அவ்ளோ விஷயம் இருந்தது. அதுவும் இல்லாம நாங்க மூணு பேரும் சேர்ந்து பார்த்த உருப்படியான ஒரே படமும் இதுதான்.

    ஒருத்தனுக்கு இந்தப் படத்துல வர்ற லொக்கேஷன்ஸ் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது அப்படின்னு புலம்பிக்கிட்டே வந்தான். "டேய் மச்சி அந்த மலையோர கிராமத்துக்கு, மஹாராஷ்டிராவுக்கு போகணும்டா... அதுவும் பைக்-ல... எவ்ளோ சூப்பரா இருக்கும் தெரியுமா? அந்த ஜீவாவும் அஞ்சலியும் சைக்கிள்ல இருந்து இறங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பாங்களே ஒரு இடம்... அந்த இடத்துல உட்கார்ந்துக்கிட்டு வளர்மதியை நினைச்சிக்கிட்டே ஒரு தம் அடிக்கனும்டா..." அப்படின்னு உருகுனவன் திடீர்னு "டேய் அந்தப் புலியை தேடிப் போவோமா? அந்த பச்சைப்பசேல் காட்டுக்குள்ள ஏதோ ஒரு புதர்ல அது வாழ்ந்துட்டுதானடா இருக்கணும்? அந்த பிரபான்னு எழுதுன விளக்கு போதும்டா.. "அப்படின்னு ஏங்க ஆரம்பிச்சான்.

    10 Years Of Kattradhu Thamizh movie

    இல்லடா மச்சி அது இல்லாத ஒரு புலி-டா... நாம மானை தேடித் போகலாம்டா... சிரமமும் கம்மி அப்படின்னு இன்னொருத்தன் சொல்ல, நான் அந்த பாழடைஞ்ச பழைய கல் கட்டடத்தோட மேல உக்காந்துக்கிட்டு, பக்கத்துல ஓடுற நதியை ரசிச்சிக்கிட்டே கஞ்சா இழுத்தா எப்படி இருக்கும்னு கேட்க... அதிசயமா மூணுபேரும் சூப்பர் ஐடியான்னு ஒருமனசோட ஒத்துக்கிட்ட ஒரே விஷயம் இதுதான். இதுவரைக்கும்! அப்படி ஒரு நதிக்கரையில்.. அப்படி ஒரு மண்டபம் மேல.. அப்படி ஒரு கனவோட அமர்ந்து.. அப்படியே ஒரு கஞ்சாவை மூணுபேரும் மாறி மாறி இழுத்து.... "இன்னும் ஓர் இரவு .. இன்னும் ஓர் நிலவு .. இன்னும் ஓர் நினைவு.. இதோ இதோ எதிரில் இருந்து பயமுறுத்து.."-ன்னு அந்த ரகசிய குரல்ல கரகரன்னு பாடுற அந்த நொடிக்காக காத்துக்கிட்டு இருக்கோம்.

    பிரபாவோட கொலைகள் யாருக்குமே பிடிக்கல. அந்நியமாவே இருந்தது எங்களுக்கு. சிரிப்பு கூட வந்தது. அதேமாதிரி அந்த இரவுல, இருள் சூழ்ந்த தெருவுல தனியா நோக்கமே இல்லாம பிரபா நடந்து போறப்போ ஒரு வீட்டுக்குள்ள இருந்து வர்ற பெண்ணோட அலறலை கேட்டதுமே அது ஆனந்திடா மச்சின்னு மூணு பேருமே ஒரே நேரத்துல சொன்னது பெரிய பலவீனம்தான் இல்லையா?ஆனா கருணாஸோட பிரபா பேசுற வசனங்கள் எல்லாமே ரொம்ப ரசிச்சோம். நாங்க பேசுகிற மாதிரி கூட இருந்திச்சு அது. அழகம்பெருமாள் மாதிரி ஒரு வாத்தியார் எங்க மூணு பேர் வாழ்க்கையிலும் இருந்திருக்காங்க. ஆச்சரியப்பட இதுல ஒண்ணுமில்ல. எல்லார் வாழ்க்கையிலயும் அப்படி ஒரு வாத்தியார் இருப்பாரு. அவர் இறக்கும்போது நமக்கு தகவல் கூட வந்துசேராது.

    10 Years Of Kattradhu Thamizh movie

    "பறவையே எங்கு இருக்கிறாய்.." அப்படின்னு இளையராஜா குரல் ஆரம்பிக்கும் படத்துல.. மொத்த தியேட்டர்லயும் நாங்க மூணு பேர் மட்டும் கைத்தட்டுனது ஞாபகம் இருக்கு.அப்படி ஒரு போதை அந்தக் குரல்ல.. அந்த சிச்சுவேஷன்-ல.. அந்த கடிதங்களோட வரிகள்ல.. மூணு பேர்ல ஒருத்தன் ரொம்ப நாள் ஆனந்தி எழுதுன லெட்டர் வரிகளை பிரபா படிக்கிறத மட்டும் ரிங்க்டோனா வச்சிருந்தான். அவன் துணியே துவைக்கமாட்டாங்கிறது கொசுறு தகவல். ஒரு ஆசிரியனா போகணும்ங்கிற ஆசை எங்க மூணு பேருக்குமே இருந்திருக்கு. ஆனா கிடைச்சதென்னவோ வேற வேற வாழ்க்கை. அதுல ஒருத்தனுக்கு வாழ்க்கை இன்னும் எதுவுமே கொடுக்கவே இல்ல. பிரபாவா அலையிற ஆசையும், வேட்கையும் மூணு பேருக்குமே இந்த நொடியும் நிறைஞ்சிருக்கு. ஆனந்திகளை கடந்து வந்தாச்சு. ஆனா மிருகம் உறங்குற, எப்பவும் விழிக்க தயாரா இருக்குற தாடி வச்ச பிரபாவை என்ன செஞ்சும் தொலைக்கவே முடியல எங்களால.

    10 Years Of Kattradhu Thamizh movie

    இந்த படம் பேசுற அரசியல் பத்தி நாங்க ரொம்ப நாள் விவாதிச்சிட்டு இருந்தோம். குறிப்பா ஐ.டி தொழிலாளிகள் மேல வெச்ச விமர்சனம். அதுதான் தமிழ் சினிமாவுல முதல்முறைன்னு நினைக்கிறேன். அந்த இரவுல வழக்கம்போல யாருமில்லா தனிமையில, பேச ஒரு ஜீவன் கிடைக்காதா அப்படின்னு ஏங்குற உணர்வுள்ள பிரபாகிட்ட அந்த ஐ..டி ஊழியன் சிக்குறான். தன்னோட சோகத்தை புலம்பலை பிரபா அந்த இடத்துல வெளிக்கொண்டு வர்ற விதம் அவனைப் பத்தியும், அவனோட தொழிலை பத்தியும் முழுக்க முழுக்க சொல்லிட்டுப் போகும். ஒரு நல்ல இயக்குனருக்கு அடையாளமா நாங்க இந்தக் காட்சிய சிலாகிச்சி பேசிக்கிட்டு இருந்தோம். குறிப்பா அந்த கார் கண்ணாடி மேல கல்லை தூக்கி போடுற மாதிரிதான் அந்த காட்சி ஆரம்பிக்கும். கடைசியில அந்த பையன் காரை ஓட்டிட்டு போகும்போதும் கல் அங்கேயே அப்படியே உறைஞ்சி நிக்கும். அட்டகாசமான இயக்கம் அது.

    விபத்துகள்ல உயிரிழக்குற மனிதர்கள், உறவினர்களா எங்க மூணு பேருக்குமே இருந்திருக்காங்க. இதுல ஒருத்தனுக்கு அவனே ஒரு விபத்துல மாட்டி பரிதவிச்சிருக்கான். பிரபாவோட குடும்பம் இறக்குறது, அந்த நாய் ட்ரெயின்-ல அடிபட்டு சாகுறது, வாத்தியாரு போட்-ல போறப்ப சாகுறது.. இப்படி இந்தப் படத்தோட மரணங்கள் ஏதோ ஒருவகையில எங்களோட வாழ்க்கையில கனெக்ட் ஆச்சு. உங்களுக்கும் ஆகியிருக்கும். ஏன்னா மரணத்தை விட கொடூரம் அது நிகழும் விதம்தான். வேதனையை, அழுகையை அது பலமடங்கு அதிகப்படுத்துது. உள்ளுக்குள்ள ஏற்படுற அந்தத் தாக்கம் ஒரு பெரிய வெற்றிடத்தை உண்டாக்கி நம்மள ஒரு கார்னருக்கு தள்ளுது.

    10 Years Of Kattradhu Thamizh movie

    பிரபா தலைக்குள்ள ஒரு மணி ஓசை நிக்காம கேட்குமே.. ஞாபகம் இருக்கா? அதோட ஆரம்பப்புள்ளி மேற்கண்ட எந்த விபத்தா வேணும்னாலும் இருக்கலாம். நமக்குள்ளயும் அந்த ஒலி கேட்டிருக்கும் அப்பப்போ. எங்களுக்குள்ளயும் கேட்டிருக்கு. நாங்க அதை ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிட்டதால பிரபாவோட எல்லையை அடையல. தனிமையில செத்து உழன்ற பிரபா அந்த ஒலி கொடுத்த இம்சையால ஒரு கொலைகாரனா மாறுறான். நிறைய யோசிக்க வேண்டிய விஷயம் இது. இல்லையா?

    உங்க ஆனந்தியை விட்றாதீங்க... பிரபாவை தொலைச்சிடாதீங்க... இயக்குனர் ராம் கொடுத்த இந்த பொக்கிஷத்தை மறந்துடாதீங்க..!

    - பால கணேசன்.

    English summary
    It is 10 years since the release of the 'Kattradhu Tamizh' of Jeeva and Anjali directed by Ram. The director handling the love of this film has created tremendous vibrations among fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X