காதலியை மணந்தார் சஞ்சய் தத்

சுனில் தத் - நர்கீஸ் தத் தம்பதிகளின் மகன் சஞ்சய் தத். அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் மீண்டவர் சஞ்சய் தத். சமீபத்தில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றார் சஞ்சய் தத். தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில் சஞ்சய் தத்தின் காதலி மான்யதாவை அவர் சமீபத்தில் மணந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. முன்பும் கூட இதுபோன்ற செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம் அதை சஞ்சய் தத் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் இருவருக்கும் திருமணமாகியிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுப்பட்டது.
மேலும், சமீபத்தில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி மான்யதாவும், சஞ்சய் தத்தும் இணைந்து வாழ்த்து விளம்பரம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சஞ்சய் தத்தும், மான்யதாவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மகள் கருத்து சொல்ல மறுப்பு:
சஞ்சய் தத், மான்யதா கல்யாணம் குறித்து சஞ்சய் தத்தின் மகள் திரிஷாலா தத் கருத்து சொல்ல மறுத்து விட்டார். சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார் அவர்.
இதேபோல சஞ்சய் தத்தின் சகோதரி பிரியாவுக்கும் இந்தத் திருமணம் குறித்து தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கல்யாணம் குறித்து எங்களுக்குத் தெரியாது. எந்தத் தகவலும் எங்களுக்கு இல்லை. இருந்தாலும், எனது சகோதரருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்
சஞ்சய் தத், மான்யதாவை வாழ்த்த செல்வீர்களா என்று கேட்டபோது, கல்யாணம் எங்கு நடந்தது என்றே தெரியாத நிலையில் எப்டிப் போக முடியும் என்றார் அவர்.
கல்யாணத்தின்போது சஞ்சய் தத் குடும்பத்தினர் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. மான்யதாவின் நண்பர் ஒருவரின் வீட்டில்தான் கல்யாணம் நடந்துள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகை புகைப்படக்காரர்கள், டிவி கேமராமேன்களுக்கு போஸ் கொடுத்தனர்.
சஞ்சய் தத் ஏற்கனவே 2 முறை திருமணமானவர். இரு திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு உற்ற துணையாக மான்யதா இருந்து வந்தார். தற்போது இருவரும் வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











