'ஜோதா அக்பர்' தமிழ் லேட் ஆகும்!

யுடிவியின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ஜோதா அக்பர். பிப்ரவரி 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட முதலில் யுடிவி தீர்மானித்திருந்தது. தமிழ் தவிர தெலுங்கிலும் இப்படத்தை டப்பிங் செய்ய தீர்மானித்திருந்தது யுடிவி. இரு மொழிகளிலும் டப்பிங் பணிகளும் கூட முடிந்து விட்டன.
இந்த நிலையில் இரு மொழி டப்பிங் ரிலீஸையும் தள்ளி வைத்துள்ளதாம் யுடிவி.
தமிழ் டப்பிங் படத்தின் தமிழக, கேரள ரிலீஸ் உரிமைக்கு ரூ. 3 கோடி விலை நிர்ணயித்துள்ளது யுடிவி. ஆனால் யாரும் அந்த விலையைக் கொடுக்க முன்வரவில்லையாம்.
ரித்திக்கின் முந்தைய படங்களான கிருஷ் மற்றும் தூம்2 ஆகிய இரு படங்களும் தமிழகம், கேரளாவில் ரூ. 2 கோடி வரை வசூல் செய்தன. இருந்தாலும் ஜோதா அக்பருக்கு பெரிய விலை கொடுக்க யாரும் முன்வரவில்லையாம்.
ஜோதா அக்பர் மூன்றரை மணி நேரம் ஓடும் வகையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு நீளமாக படம் ஓடினால், அதிலும் டப்பிங் படமாக இருப்பதால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால்தான் பெரிய விலை கொடுக்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லையாம்.
ஆனால் படத்திலிருந்து ஒரு காட்சியைக் கூட நீக்கக் கூடாது என்பதில் இயக்குநர் அசுதோஷ் கெளரிகர் உறுதியாக இருக்கிறாராம். இதனால் தமிழ் டப்பிங்கை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திப் படம் மட்டும் பிப்ரவரி 15ம் தேதியன்று ரிலீஸாகிறது. அதுவும் கூட குறைந்த அளவிலான பிரிண்டுகளுடன் வருகிறதாம். இந்திப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து தமிழ் டப்பிங்கை இறக்கி விடத் தீர்மானித்துள்ளனராம்.


Click it and Unblock the Notifications











