தீபிகாவைப் 'பிடித்த' பெப்சி!

பெப்சி நிறுவனத்தின் குளிர்பான வகைகளை பிரலப்படுத்தும் பிராண்ட் அம்பாசடர்களாக ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், தென்னிந்திய பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக இரு பிரபலங்கள் இந்த வரிசையில் இணைந்துள்ளனர். ஓம் சாந்தி ஓம் மூலம் பிரபலமான தீபிகா மற்றும் சாவரியா மூலம் ஹிட் ஆன ரன்பீர் கபூர் ஆகியோரே அந்த இரு ஸ்டார்கள்.
இந்த இருவரையும் பெப்சி நிறுவனம் புதிய பிராண்ட் அம்பாசடர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது. இருவரும், ஷாருக்கானுடன் இணைந்து இந்த ஆண்டு தயாரிக்கப்படவுள்ள விளம்பரப் படங்களில் நடிப்பார்கள்.
பெப்சி விளம்பரத்தில் நடிக்கவிருப்பது குறித்து தீபிகா கூறுகையில், ஷாருக்கான், ரன்பீருடன் இணைந்து பெப்சி விளம்பரத்தில் நடிப்பது வித்தியாசமாக இருக்கும் என்றார்.
ஏற்கனவே பெப்சி பிராண்ட் அம்பாசடர்களாக ஜான் ஆப்ரகாம், எம்.எஸ்.டோணி, யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா ஆகியோர் உள்ளனர். இதில், ஷாருக்கான், ஜான் ஆப்ரகாம் இருவரும் இணைந்து நடித்துள்ள விளம்பரப் படம் பெரும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதியில் 'சக் தே இந்தியா'
ஷாருக் கான் நடித்த சக் தே இந்தியா, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து வரும் ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
ஆசிய திரைப்பட விழா முதல் முறையாக சவூதியில் நடக்கிறது. சவூதி அரேபியாவில் திரைப்பட விழாக்கள் நடப்பது என்பது அரிதிலும் அரிதான விஷயம். இந்த வகையில் ஆசிய திரைப்பட விழா அங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஷாருக் கான் நடித்து பெரும் ஹிட் ஆன சக் தே இந்தியா, ஆசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. முதலில் சவூதி டாக்குமெண்டரிப் படமான புல் மூன் நைட் திரையிடப்பட்டது. இதையடுத்து 2வது படமாக சக் தே இந்தியா திரையிடப்பட்டது.
சனிக்கிழமை மாலை ஆசிய திரைப்பட விழா ஜெட்டாவில் தொடங்கியது. இதில் சவூதி அரேபியா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பல்துறைப் பிரமுகர்கள், தூதரக அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











