யார் பொறுப்பில் மகன்-ஆகாஷ் தொடர்ந்த வழக்கில் வனிதாவுக்கு நோட்டீஸ்

நடிகர் விஜயக்குமார் குடும்பத்திற்குள் பெரும் சண்டை மூண்டுள்ளது. இந்த சண்டை வீட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது தெருவுக்கு வந்து விட்டது. இரு தரப்பிலும் சரமாரியாக புகார்களை சுமத்தி வருகின்றனர். நடிகை வனிதா மீடியாக்களை நேரில் அழைத்து சரமாரியான புகார்களைக் கூறி வருகிறார். இதனால் மீடியாக்களில் விஜயக்குமார் குடும்பச் சண்டை சமீப காலமாக பெரிய செய்தியாகி விட்டது.
இரு தரப்பும் மாறி மாறி கோர்ட், போலீஸ் என வழக்குகளைத் தொடுத்துள்ளனர். முன்ஜாமீன் கோரி மனுக்களையும் தாக்கல்செய்துள்ளனர். வனிதா கொடுத்த புகாரின் பேரில் நடிகர் விஜயக்குமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில், வனிதா ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தன்னிடம் இருந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை அவனது தந்தையும் தனது முன்னாள் கணவனுமான ஆகாஷ் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டதாக கூறி இருந்தார். அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஐகோர்ட்டு நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் முன்னிலையில் 13-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் ஆகாஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். வனிதா வீட்டில் குடும்பச் சண்டை நடக்கும் நிலையில் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியின் படிப்பு பாழாவதால் அவன் இனி தன்னுடன் வாழ்வதற்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆகாஷ் தரப்பு வக்கீல்கள் கூறுகையில்,
எனக்கும் வனிதாவுக்கும் இடையே நடந்த விவாகரத்து வழக்கில், மகன் விஜய்ஸ்ரீஹரி என்னுடனும், மகள் ஜோவிகா வனிதாவுடனும் வாழ வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் ஆந்திராவில் வசித்தபோது செகந்திராபாத்தில் வனிதா மனு தாக்கல் செய்து, விஜய்ஸ்ரீஹரியை நியூசிலாந்தில் படிக்க வைக்க இருப்பதாகவும், அதனால் மகனை தன்னுடன் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
அங்கு, சென்னை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை வனிதா மறைத்துவிட்டார். மகன் நல்ல இடத்தில் படிக்கப் போகிறான் என்பதால் நானும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களின் குடும்பச் சண்டையில் மகனின் படிப்பு வீணாகிறது என்பதால் அவனை என்னுடன் வளர வனிதா ஒப்படைத்திருந்தார். இதுபற்றி ஒரு பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நான் ஜீப்பில் வைத்து அவனை கடத்திச் சென்றதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். என்னிடம் மகனை ஒப்படைத்துவிட்டு, இப்போது கோர்ட்டில் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தெரியவில்லை. தற்போது அவன் என்னுடன்தான் இருக்கிறான். கோர்ட் எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் விஜய்ஸ்ரீஹரியை 13-ந் தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவேன் என்றார்.
ஆகாஷின் மனுவை விசாரணைக்கு ஏற்ற கோர்ட், வனிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











