மெளனம் காக்கும் பாரதிராஜா

நிகழ்ச்சியில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்றாலும் மேடையில் அமர மறுத்துவிட்டார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் பேசுகையில், எங்களை போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரான பாரதிராஜா, இந்த நிகழ்ச்சியில் மேடை ஏறாமல் கீழே அமர்ந்திருக்கிறார். அவர் சமீபகாலமாக எந்த பொது மேடை மற்றும் திரையுலக நிகழ்ச்சி மேடைகளிலும் ஏறாமல் மெளனம் காத்து வருகிறார்.
அவருக்கு ஏன் இந்த கோபம்? அவர் திரையுலகில் சாதிக்கவில்லையா? பிறகு ஏன் இந்த கோபம்?. உண்மையில் அவருக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஆனாலும் விரதம்போல அவர் மெளனம் காத்து வருகிறார்.
தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது கண்டும், தமிழர்கள் ரோஷம் இல்லாமல் இருப்பதாலும் மெளனம் காக்கிறார். அவரது சாதனைகளுக்கு தலை வணங்கியது போல அவருடைய மெளனத்திற்கும் தலை வணங்குகிறேன்.
இலங்கையில் வாடும் லட்சக்கணகக்கான தமிழர்கள் வாழ்வுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்கும் போது பாரதிராஜாவின் மெளனம் கலையும் என்றார்.
இயக்குனர் சீமான் பேசுகையில், அமீர் எல்லோருக்கும் திரைத் தம்பி. ஆனால் எனக்கோ சிறைத் தம்பி. இலங்கை பிரச்சனைக்காக போராடி நாங்கள் இருவரும் சிறையில் இருந்தபோது 'யோகி" படம் உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்க முடிந்தது. சிறைக்கு சென்றால் எதையும் பொறுமையாக விவாதிக்க முடியும் என்றார்.
நடிகர் சிம்பு பேசுகையில், நடிப்பது கடினமா, இயக்குவது கடினமா என்று கேட்டால் நடிப்பது மிகவும் சுலபமானது என்று சொல்வேன். அதே நேரத்தில் நல்ல இயக்குனர்கள் கீழ் நடிக்கும் போது நடிப்பு மிகவும் சுலபமானது என்றார்.
இயக்குனர் அமீர் பேசுகையில், நான் எதையும் திட்டம்போட்டு செய்ததில்லை. இயக்குனர் ஆவேன், நடிகன் ஆவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
எங்களைப் போன்ற இயக்குனர்களை உருவாக்கிய இன்ஸ்டியூட் பாரதிராஜா. அவரை விழாவுக்கு அழைத்தபோது விழாக்களில் பங்கேற்பதில்லை என்றார். நீங்கள் வராவிட்டால் விழாவே கிடையாது என்று சொல்லி அவரை அழைத்து வந்தேன்.
அரசியல் வேறுபாடு இல்லாமல் விழாக்களில் பங்கேற்கும் கலாச்சாரம் குறைந்து வருகிறது. கேப்டன் விஜய்காந்த், சரத்குமாரை அழைக்க விரும்பினேன். ஆனால், நேரம் அமையவில்லை.
அரசியல் வேறுபாட்டை மீறி திரைத்துறையினர் என்ற முறையில் விழாக்களில் பங்கேற்க வேண்டும். அந்த வகையில் தான் தயாநிதி அழகிரியை இங்கே அழைத்து வந்தேன்.
சிம்பு பேசினாலே வம்பு என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சிம்பு என்றால் அன்பு. அவரைப் போல இயல்பான மனிதரை பார்க்க முடியாது என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாலா, சசிகுமார், நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா, ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











