பாலக்காட்டில் எம்.ஜி.ஆர். நினைவிடம் திறப்பு-காங். அமைச்சர் திறந்தார்

இந்த நினைவிடத்தை ரூ. 52 லட்சம் மதிப்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கான உதவியை உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அச்சுதன் வழங்கியுள்ளார். இந்த நினைவிடத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான மத்திய இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் திறந்து வைத்தார். எம்.ஜி.ஆர். படத்தை அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கேரளாவில் பிறந்து, பக்கத்து மாநிலமான தமிழகத்துக்கு வந்து, பெரும்பான்மை மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து, 13 ஆண்டுகள் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தவர் எம்.ஜி.ஆர்.அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தலைவரை உருவாக்கிய பெருமை, இந்த வடவனூர் கிராமத்துக்கு உண்டு.
அவரது நினைவாக இந்த சமுதாயக் கூடத்தை உருவாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நட்புறவு எப்போதும் தொடர வேண்டும். ராமாவரம் தோட்டத்தை ஊனமுற்றோர் பள்ளிக்கும், சத்யா ஸ்டூடியோவை மகளிர் கல்லூரிக்கும், கல்யாண மண்டபத்தை கட்சி அலுவலகத்துக்கும் எழுதிக் கொடுத்து, வாழ்நாளெல்லாம் வள்ளலாக எம்.ஜி.ஆர். வாழ்ந்தார்.
மக்களுக்காக வாழ்ந்ததால் தான், இன்று அவரை மக்கள் மறக்காமல் உள்ளனர்.இறந்து 23 ஆண்டுகளுக்குப் பின், எதிரிகளை வீழ்த்துகிற சக்தி, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. அதனால் தான், அவர் வாழும் காலத்தில் அவரை தூற்றியவர்கள் கூட, இன்றைக்கு "அவரால் தான் நான் முதல்வர் ஆனேன்' என்று சொல்கிற நிலை உள்ளது.
அவர் உருவாக்கிய சத்துணவுத் திட்டம் தான், இன்று உலகம் முழுவதும் போற்றப்பட்டு, பல இடங்களிலும் பின்பற்றப்படுகின்றன. அவரைப் பின்பற்றி, தமிழகத்தில் இரண்டு முறை எம்.ஜி.ஆர்., ஆட்சியை நடத்தி, தமிழகம் பல நிலைகளிலும் தலை நிமிரச் செய்தவர் ஜெயலலிதா என்றார்.
ஜெயலலிதாவிடம் பேசி இங்கு எம்.ஜி.ஆர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்வதாக பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன், அச்சுதனிடம் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு அதிமுக எம்.எல்.ஏ. தாமோதரனும் கலந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











