'முன்னிலும் வேகத்தோடு தயாராகிறார் ரஜினி' - தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்
சென்னை: ராணா படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்காக முன்னிலும் வேகத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த், என்று தகவல் வெளியிட்டுள்ளார் படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர்.
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படம் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றுதான் ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சுமார் ஒரு மாத காலம் சென்னை இசபெல்லா மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் சிங்கப்பூரில் உயர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார்.
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டிலும் ரஜினி இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது ராணா் படம் தொடர்பான பணிகளில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் இணைந்து கவனித்து வருகிறார்.
இந்தப் படத்துக்காக, கவிஞர் வைரமுத்து 3 பாடல்களை எழுதியிருக்கிறார். அந்த பாடல்கள், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பதிவு செய்யப்பட்டு விட்டன. ரஜினி இவற்றைக் கேட்டு ஒப்புதல் அளித்துவிட்டார். இப்போது அவை மாஸ்டரிங் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், வரும் அக்டோபரில் ராணா தொடங்கும் என ரஜினியின் மகள் சௌந்தர்யா தெரிவித்திருந்தார்.
இப்போது நவம்பரில் தொடங்க இருக்கிறது என்று அதன் இணைத் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினி சார் எல்லா வகையிலும் முழுமையாக தயாரான பிறகுதான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக உள்ளோம். இப்போது அவர் முன்பை விட ஆரோக்கியமாகவும் படப்பிடிப்புக்கேற்ற உடல் நலத்தோடும் உள்ளார். உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். நவம்பரில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











