வருத்தம் தெரிவித்த விகடன்!
எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழ்த் திரையுலகத்திடம் ஆனந்த விகடன் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில், ஜெயமோகன் தனது இணையதள பிளாக்கில் எழுதிய ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
எம்.ஜி.ஆர், சிவாஜியை ஜெயமோகன் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். அதை ஆனந்த விகடன் வெளியிட்டது மிகவும் தவறான செயல் என தமிழ் திரையுலகம் கோபத்துடன் கண்டித்தது.
இதுதொடர்பாக நடிகர் சங்கம், கண்டனக் கூட்டத்திற்கு கடந்த 9ம் தேதி ஏற்பாடு செய்தது. அதில் திரையுலகின் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். நடிகர், நடிகையர் விகடனையும், ஜெயமோகனையும் காராசரமாக விமர்சித்தனர்.
விகடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை விகடன் நிறுவனத்தின் சினிமா தொடர்பான எதற்கும் ஒத்துழைப்பு தர மாட்டோம் என அக்கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டது. ஜெயமோகனுக்கும் இதேபோன்ற எச்சரிக்கை விடப்பட்டது.
நடிகர் சங்கத்தின் இந்த முடிவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில், பெப்சி தொழிலாளர் சம்மேளனம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்தன.
இதனால் விகடன் நிறுவனத்தின் விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் முதல் படமான சிவா மனசுல சக்தி படத்தின் ஷூட்டிங்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பெப்சியின் தடையால் தொழிலாளர்கள் யாரும் படப்பிடிப்புக்கு வரவில்லை.
இதேபோல ஜெயமோகன் தற்போது தொடர்புடைய நான் கடவுள், அங்காடி தெரு ஆகிய இரு படங்களின் ஷூட்டிங்கும் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஆனந்த விகடனின் லேட்டஸ்ட் இதழில் ஜெயமோகன் கட்டுரையை பிரசுரித்ததற்காக வருத்தமும், மன்னிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத் துறையினர் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் ரசிகர்களின் மனங்களைப் புண்படுத்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் அதில் விகடன் கூறியுள்ளது.
இருப்பினும் ஜெயமோகன் இதுவரை தனது எழுத்துக்காக மன்னிப்பு கேட்கவில்லை.


Click it and Unblock the Notifications











