தரமான தியேட்டர்கள்-சேரன் வலியுறுத்தல்

திருவனந்தபுரத்தில் கேரள அரசு சார்பில் 14வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 18ம் தேதி வரை நடக்கும் விழாவில் பல்வேறு மொழிகளை சேர்ந்த 164 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் சேரனின் பொக்கிஷம், மம்முட்டி, சரத்குமார் நடித்த பழசிராஜா ஆகிய படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. விழாவின் ஒருபகுதியாக, 'டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சினிமா வளர்ச்சி' பற்றிய கருத்தரங்கு நடந்தது.
திரைப்பட அகடமி தலைவர் மோகனன், துணைத்தலைவர் ஜோசப், நடிகை பத்மப்பிரியா மற்றும் சினிமா துறையை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கை இயக்குனர் சேரன் தொடங்கி வைத்து பேசுகையில், 'டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் சினிமாக்களை திரையிடும் வகையில் தியேட்டர்களின் தரம் உயர வேண்டும். தரம் உயர்ந்தால் மட்டுமே உண்மையான ரசனை சாத்தியப்படும். இதற்காக சினிமா துறையை சேர்ந்தவர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications











