மிஸ் வேர்ல்ட் தேர்வில் நடுவர்கள் பாரபட்சம்: பார்வதி புகார்

மிஸ் வேர்ல்ட் பட்டப் போட்டியில் மயிரிழையில் இந்தியாவின் பார்வதி ஓமனக்குட்டன் வெற்றியை நழுவ விட்டார். அவருக்கு முதல் ரன்னர் அப் இடமே கிடைத்தது. ரஷ்யாவைச் சேர்ந்த சுகினோவா மிஸ் வேர்ல்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதால்தான் தனக்கு வெற்றி கிடைக்காமல் போய் விட்டதாக பார்வதி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியா விஷன் சானலுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் மற்றவர்களை விட சிறப்பாகவே பங்களித்தேன். கேள்வி, பதில் பகுதியிலும் நான் சிறப்பாகவே பதிலளித்தேன். ஆனால் என்னை 2வது இடத்திற்கு தள்ளி விட்டனர். இது நியாயமற்றது.
நடுவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டனர். அவர்களின் முடிவு எனக்கு அதிருப்தியைத் தந்துள்ளது. நான் மட்டுமல்ல எல்லோருடைய எண்ணமும் இதுதான். நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன் என்றார் பார்வதி.
பார்வதியின் சொந்த ஊரான கேரள மாநிலம் செங்கனச்சேரியிலும் பார்வதிக்குப் பட்டம் கிடைக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அழகியை விட பார்வதியே அனைத்து வகையிலும் சிறந்தவர் என்று பார்வதியின் உறவினர்கள், அவரது வீட்டுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், 2வது இடம் கிடைத்ததன் மூலம் இந்தியாவுக்கு பார்வதி பெருமைதான் தேடித் தந்துள்ளார் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











