வம்பில் சிக்கிய 'வணக்கம்மா'!
வணக்கம்மா என்ற பெயரில் உருவாகவுள்ள பட பூஜை தொடர்பான போஸ்டர்களில் ராமன், அனுமன் ஆகியோரின் படங்களை சர்ச்சைக்குரிய வகையில் ளியிட்டதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட பூஜையும், ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தமிழில் வணக்கம்மா என்ற வித்தியாசமான தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இதில் சுவாதி என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
'தம்ப்ரீ' வெண்ணிற ஆடை மூர்த்தி, மதன்பாப், தியாகு, விஷ்ணுப்பிரியன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்காக ராமன், அனுமன் வேடத்தில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ்களும் போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் அந்த போஸ்டர்கள் இருந்ததால், இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று காலை ஏற்பாடுகள் நடந்தன. அங்கு பேனர், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. கொடி, தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. சினிமா பிரபலங்களும் பூஜைக்காக வந்திருந்தனர்.
இவ்விழாவை கண்டித்து இந்து முன்னணியினரும் அங்கு திரண்டார்கள். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். பூஜையை நடத்த தடை விதித்தனர். இதையடுத்து பட பூஜை விழா ரத்து செய்யப்பட்டது.
மேலும், பட போஸ்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் கிழித்து அப்புறப்படுத்தினர்.
இந்த சர்ச்சையால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் அரிராம் கூறுகையில், பிறர் மனதை புண்படுத்தும்படி நான் படம் எடுக்க மாட்டேன். ஏற்கனவே நான் உயிரோசை என்ற படத்தை நான் எடுத்து சிறந்த கதாசிரியருக்கான விருதைப் பெற்றுள்ளேன்.
வணக்கம்மா படத்தின் கதைப்படி ஹீரோ சரவணனும், விஷ்ணுப் பிரியனும், பிறரிடமிருந்து தப்பிக்க ராமன் போலவும், அனுமன் போலவும் வேடம் போடுகின்றனர். அவ்வளவுதான். மற்றபடி கடவுளை கேலி செய்யும் வகையில் எந்தக் காட்சிகளும் படத்தில் இடம் பெறவில்லை.
இருப்பினும் போலீஸார் அறிவுறுத்தியதால், பட பூஜையை ரத்து செய்து விட்டோம் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து பாஜக தலைவர் இல.கணேசன் கூறுகையில்,
இந்துக்கள் மனம் புண்படும் அளவுக்கு சினிமாக்களில் காட்சிகள் இடம் பெறுவது அதிகரித்து வருகிறது. இது அத்து மீறிய செயலாகும்.
வணக்கம்மா திரைப்படத் தயாரிப்பாளர் அத்துமீறி செயல்பட்டு ராமபிரானும், அனுமனும் புகை பிடிப்பது போன்ற காட்சியை உருவாக்கி உள்ளார். சுவரொட்டிகளையும் ஒட்டி இன்று படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவித்தார்.
இது பற்றி நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே கண்டித்தேன். இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அரசாங்கம் இதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்துக்கள் ஆர்த்தெழுவதை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டேன்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தார்.
இருப்பினும் அரசு தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்தியது பாராட்டுக்குரியது. இது இந்துக்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி.
இந்து மதத்தில் தீவிரவாத இயக்கம் இல்லை. தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி விடாதீர்கள் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











