டல்லு தங்கராசு... - 'அழகர்சாமியின் குதிரை' இசை வெளியீட்டில் நெகிழ வைத்த இளையராஜா!

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அதுவே இந்தப் படத்தின் பரிமாணத்தை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கும் அவர் வந்தது, படக்குழுவினருக்கும் பார்வையாளர்களுக்கும் ஏக உற்சாகத்தைத் தந்தது.
காரணம், தனது எத்தனையோ படங்களின் இசை வெளியீடு, நூறாவது நாள் விழா என எதிலும் பங்கேற்காதவர் ராஜா. அதேபோல, இந்த விழாவில் மிகவும் இயல்பாக, மனம்விட்டுப் பேசினார் இசைஞானி.
அவர் கூறுகையில், "ஒரு நாவலை படமாக்கியுள்ளார் சுசீந்திரன். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். பொதுவாக ஒரு படத்தின் போஸ்டரைப் பார்த்ததுமே அது வெற்றிபெறுமா பெறாதா என்று சொல்லிவிடுவேன்.
வெண்ணிலா கபடிக் குழு பட போஸ்டர்களைப் பார்த்த உடனே, எனது இசைக்குழுவில் உள்ள கலைஞர்களுக்கு, இந்தப் படம் நல்லா வரும் பாருங்க என்று சொன்னேன். அப்படியே நடந்தது.
இந்தப் படம் பண்ணும்போது ஒரு நெகிழ்ச்சியான விஷயம் நடந்தது. இந்த படத்தில் பணியாற்றும் லெனின் பாரதியும் சுசீந்திரனும் நான் இந்த படத்துக்கு இசையமைக்கணும்னு கேட்க வந்திருந்தாங்க.
அப்போ லெனின் பாரதிகிட்ட தம்பி உனக்கு எந்த ஊரு என்றேன். அவர் கோம்பை என்றார். அது எனது சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு பக்கத்து ஊர். நான் அங்கதான் பள்ளிக்கூடத்துக்குப் போனேன். சரி நம்ம ஊர் பையனாச்சே என்று, அங்க யாரு வீடுப்பா உன்னுடையது என்றேன். தங்கராசு பையன் என்றார்.
எந்த தங்கராசு என்றேன். டல்லு தங்கராசு என்றார். இதற்கு முன்பு இந்த பையன் என்னை பார்க்க வந்திருக்கிறார். அப்போது கூட இந்த விஷயத்தைச் சொன்னதில்லை. ஏம்பா முன்னாடியே சொல்லலை என்றேன். நான் சிபாரிசுக்காக அவங்க பெயரை சொல்றதா நீங்க நினைக்கக் கூடாதுய்யா, அதனால்தான் சொல்லலை என்றார்.
அதுமட்டுமில்ல, அவருடைய அப்பா டல்லு தங்கராசுவும் இங்கே மணிவண்ணனிடம் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்து பல படங்களில் வொர்க் பண்ணியிருக்கார். ஒருமுறை கூட என்னை வந்து பார்த்ததில்லை. டைரக்டர் ஆனதும் வந்து பார்க்கறதா இருந்தாராம். பட வாய்ப்பு கிடைக்காத சோகம், இன்னும் எத்தனையோ கவலைகளில் இறந்தும் போயிட்டார்.
அந்த டல்லு தங்கராசு நினைவாக இந்தப் படத்தில் ஒரு பாட்டுப் பாடியுள்ளேன். குரல் மாத்திப் பாடியிருக்கிறேன். அதனால, டல்லு தங்கராசு பெயரையே டைட்டிலில் போடணும்னு சுசீந்திரன் கிட்டே சொன்னேன். ஏதோ ஒரு வகையில் அவர் ஆசையை நிறைவேத்தனுங்கிறதுக்காக இதைச் சொன்னேன்", என்றார்.
விழாவில் முதல் இசைத் தட்டை இளையராஜா வெளியிட, இயக்குநர் பாலு மகேந்திரா பெற்றுக் கொண்டார்.
இயக்குநர்கள் சசிகுமார், வெற்றிமாறன், எஸ் பி ஜனநாதன், பாண்டிராஜ், சிம்புதேவன் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.


Click it and Unblock the Notifications











