'ஹாலிவுட்' இங்கு வரணும்: கமல்

கொடைக்கானல்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்,
அழகான கமலஹாசனை கோவணம் கட்டிப் பார்த்தவன் நான். அவருடன் நான் நிறைய பழகியிருந்தாலும், அவரை இப்போதும் வியப்பாகத்தான் பார்க்கிறேன், இந்த அமானுஷ்ய சக்தி அவருக்குள் எப்படி வந்தது என்று.
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரே நடிகர் உலகநாயகன் கமலஹாசன்தான் என்றார்.
பி்ன்னர் கமல் பேசுகையி்ல்,
என்னைப் பார்த்து வியப்பதாக பாரதிராஜா கூறினார். அவரைப் பார்த்து நான் வியப்பது, என்னைப் பார்த்து அவர் வியப்பதெல்லாம் பரஸ்பரம்.
16 வயதினிலே படத்தின் கதையை அவர் வந்து என்னிடம் சொன்னபோது, அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டது, என் கெட்டிக்காரத்தனம். அதை நாங்கள் இருவரும் இன்னும் மறக்கவில்லை.
சின்ன படம், பெரிய படம் என்று வேறுபடுத்துவது சரியல்ல. நிறைய முதலீட்டில் உருவான எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழித்தால், அது சின்ன படமாகிவிடும். அதுபோல் குறைவான முதலீட்டில் உருவான படம் வெற்றி பெற்றால், அது பெரிய படமாகி விடும். 16 வயதினிலே அப்படிப்பட்ட படம்தான்.
தண்ணீர் இல்லாத இடத்தில் போய் அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். அகதிகளுக்கு சோற்றுப் பொட்டலத்தை வீசுவது போல், பிலிம் ரோல்களை வீசிவிட்டுச் செல்வார்கள். டிஸ்கோ நடனம் ஆடுபவனுக்கு கோவணத்தை கட்டி படம் எடுக்கிறார்கள் என்றெல்லாம் பேசி ஏளனம் செய்தார்கள்.
படம் வெளிவந்தபின், அப்படி பேசியவர்கள் எல்லாம் பாராட்டினார்கள்.
தசாவதாரம் படத்தின் வெற்றியைப் பார்த்து, இன்றைக்கு உலகமே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் இதுபோல் கடினமாக உழைக்கும்போது, அதற்காக கிடைக்கிற பாராட்டுகள் நெகிழ வைக்கிறது. சந்தோஷம்.
இங்கே பேசியவர்கள், ஆஸ்கர் விருது பற்றி குறிப்பிட்டார்கள். நான் பல முறை சொன்னதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாம் அங்கு போய் அந்த விருதை வாங்குவதைவிட, இங்கு நம்மவர்கள் வழங்கும் விருதை வெள்ளைக்காரர்கள் வாங்கிப் போகவேண்டும். அதுதான் நமக்குப் பெருமை.
இதை என் வாழ்நாளில் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்பதில் தின்னமாக இருக்கிறேன். அதற்காக, ஆழ உழுத விதைகள் இங்கே உள்ளன என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











