நல வாரியம் அமைத்த கருணாநிதிக்கு நன்றி - தமிழ் திரையுலகம்

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் விடுத்துள்ள அறிக்கை:
"தமிழ் திரையுலகம் இன்று செழித்தோங்கி, சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் 100 நேரடி தமிழ் திரைப்படங்கள் தயாராகி வருவதற்கும், இந்த வருடம் டிசம்பருக்குள் 125 படங்களுக்கு மேல் வெளிவந்து சாதனை படைப்பதற்கும் காரணம், முதல்-அமைச்சர் கலைஞர் அளித்த கேளிக்கை வரி முற்றிலும் ரத்து, படப்பிடிப்பு கட்டணங்கள் குறைப்பு போன்ற சலுகைகள்தான் என்றால், அது மிகையாகாது.
இதற்கும் ஒரு படி மேலாக திரைப்பட துறையினருக்கு 116 ஏக்கர் இடம் ஒதுக்கி, ஆணை பிறப்பித்ததற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..."
கே.ஆர்.ஜி.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி, செயலாளர்கள் காட்ரகட்ட பிரசாத், ஆனந்தா சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
"தமிழ் திரைத்துறையின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழக அரசிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, திரைப்பட துறையினர் நல வாரியத்தினை அமைத்து, அதில் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமித்தற்காக, எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..."
வி.சி.குகநாதன்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் விடுத்துள்ள அறிக்கை:
"தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் கலைஞருக்கு 'கலையுலக படைப்பாளி' பட்டம் வழங்கி, பாராட்டு விழா நடத்தினோம். அந்த விழாவில் பேசிய கலைஞர், திரைப்பட துறையினருக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டி தரப்படும் என்று ஒரு தாயின் கருணையோடு அறிவித்தார். சொன்னபடியே 116 ஏக்கர் இடம் (முற்றிலும் இலவசம்!) ஒதுக்கி ஆணைப்பிறப்பித்துள்ளார்.
அதேபோல் திரையுலகினரின் நலன் காக்க, திரைப்பட துறையினர் நலவாரியத்தினை இன்று தமிழக முதல்வர் கலைஞர் அமைத்துள்ளார். அதற்கு தொழிலாளர் குடும்பங்களின் சார்பில் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications











