மான்யதாவுக்கு நோட்டீஸ்

48 வயதாகும் நடிகர் சஞ்சய் தத், கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த 32 வயது மான்யதாவை சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் மும்பையில் உள்ள நண்பரின் வீட்டில் வைத்து இந்து முறைப்படியும் மணந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் தங்களது திருமணத்தைப் பதிவு செய்வதற்காக தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் இருவரது சார்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் மான்யதா, தெற்கு கோவாவின் மர்மகோவா நகரில் உள்ள அக்யூம் பகுதியில் வசிப்பதாக சான்றிதழ் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் அந்த முகவரியில் மான்யதா வசிக்கவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து மான்யதா - சஞ்சய் தத்தின் திருமணத்தைப் பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மான்யதாவுக்கு மர்மகோவா அரசு அதிகாரி பரேஷ் பல்தேசாய் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், உங்களது இருப்படி முகவரி தவறானது என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது திருமணத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நோட்டீஸால் மான்யதா - சஞ்சய் தத் திருமணம் செல்லுமா, செல்லாதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஏற்கனவே மான்யதாவின் முதல் கணவர் மும்பை, பந்த்ரா நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டுள்ளார். அதில், மான்யதாவுக்கும், தனக்கும் இஸ்லாமிய முறைப்படி நடந்த கல்யாணம் இன்னும் முறைப்படி ரத்தாகவில்லை. இந்த நிலையில் சஞ்சய் தத்தை அவர் மணந்தது இஸ்லாமிய சட்டப்படி சட்டவிரோதமனதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்படி பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளதால் மான்யதா - சஞ்சய் தத் திருமணம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











