நான்தான் குடித்துவிட்டு கார் ஓட்டினேன்...-சிம்பு டிரைவர் வாக்குமூலம்!!

நடிகர் சிம்புவின் கார் சில தினங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த வழக்கில் நேற்று இரவு சிம்புவின் டிரைவர் வசந்த குமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த 10ம் தேதி இரவு நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றார். காரை சிம்புவின் டிரைவர் வசந்த குமார் ஓட்டிச் சென்றார்.
ஹோட்டலில் இருந்து திரும்பி வந்த குறளரசன் கார் காணாமல் போனதால், தந்தை டி.ராஜேந்தருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே ஆயிரம் விளக்கு போலீசில் புகார் கொடுத்தார் டி.ராஜேந்தர்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி அந்தக் கார் உத்திரமேரூர் சாலையில் சாலவாக்கம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியது. இதில் சாலவாக்கத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் உயிரிழந்தார். பாபு, அன்பழகன் என்ற 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆனால் அந்த காரை நடிகர் சிம்புவும், அவர் தம்பியும் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கி விட்டதாக பரபரப்பு கிளம்பியது.
இதனை டி.ராஜேந்தரும், அவர் மகன் சிம்புவும் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மறுத்தனர்.
விபத்து நடந்த அன்று இலங்கையில் படப்பிடிப்பில் சிம்பு இருந்ததற்கான ஆதாரங்களை சிம்பு வெளியிட்டார்.
டிரைவர் கைது:
இந்நிலையில் தலைமறைவாகிவிட்ட டிரைவர் வசந்த குமாரை நேற்று இரவு ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். டிரைவர் வசந்த குமார் நடந்த சம்பவங்கள் குறித்து அளித்துள்ள வாக்குமூலம்:
நான்கு மாதங்களுக்கு முன்புதான் சிம்பு வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். 10ம் தேதி இரவு குறளரசன் அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றபோது அவருக்கு நான்தான் கார் ஓட்டினேன். அவர் வர தாமதமாகும் என்று கூறியதால் தாம்பரத்தில் உள்ள எனது நண்பன் அசோக் வீட்டிற்குச் சென்றேன். அங்கு அவன் இல்லாததால் மது அருந்தினேன். பிறகு போதையில் அங்கேயே தூங்கி விட்டேன்.
காலையில் அசோக்கும், நானும், வேறு 2 நண்பர்களும் வேடந்தாங்கலுக்கு சென்றோம். அங்கு அசோக்குக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணப்பெண் வீட்டிற்கு சென்று அவரை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது மீண்டும் மது அருந்தினோம்.
உத்திரமேரூர் சாலையில் சாலவாக்கம் அருகே வரும்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டேன். அதில் பைக்கில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த பயந்துபோய் காரை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டோம்.
அந்தக் காரில் நானும், என் நண்பர்களும் மட்டும்தான் போனோம். குறளரசனோ சிம்புவோ வரவில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











