twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படங்களில் பாலுறவைத் திணிக்கலாமா?-வைரமுத்து ஆதங்கம்

    By Chakra
    |

    Vairamuthu
    தமிழ்த் திரைப்படங்களில் பாலுறவுக் காட்சிகளைத் திணிக்கும் போக்கு உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பாலுணர்வு பக்திமாதிரி...நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும், என்றார் கவிஞர் வைரமுத்து.

    சீனு ராமசாமி இயக்கியுள்ள இரண்டாவது படம் தென் மேற்கு பருவக்காற்று. விஜய் சேதுபதி, வசுந்தரா சியேட்ரா ஜோடியாக நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் சரண்யா நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் கிரீன்பார்க்கில் நடந்தது. இயக்குநர் சீனுராமசாமி, பட அதிபர்கள் ஷிபு ஐசக், மைக்கேல் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கவிஞர் வைரமுத்து இப்படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் அவர்தான்.

    படத்தில் பணியாற்றியது குறித்து வைரமுத்து பேசியதாவது:

    தமிழ் புவியியல் சார்ந்த படம் என்றால் அது தென் மேற்கு பருவக்காற்றுதான். பார்க்கும் எவரையும் சட்டென்று ஈரப்படுத்திவிடும் தமிழ் மண் சார்ந்த கதை.

    படம் பார்த்து விட்டு என்னால் பேச முடியவில்லை. நான் மட்டு மல்ல இதை பார்க்கும் எல்லோருக்கும் இருதயம் உடைந்து கண்ணீர் வெளியே வரும்.

    மனிதனின் உணவு, பழக்கம், உடை போன்றவை மாறலாம். ஆனால் எப்போதும் மனித குலத்திடம் மாறாமல் இருப்பது தாய் பாச உணர்வு ஒன்றுதான். அதனை இந்த படத்தில் கொட்டி காட்டியுள்ளனர்.

    தமிழன் கண்டு பிடித்த முதல் சைவ செருப்பு ஆவாரம் இலை. வெயில் மணலில் அந்த இலையை செருப்பாக்கி நான் நடந்து இருக்கிறேன். உப்பு இல்லை என்றால் உணவில் தும்பை செடியை பிடுங்கி போடுவார்கள். உணவில் உப்பின் சுவை வந்து விடும். தமிழர்களின் இத்தகைய பழைய வாழ்க்கை முறையை இந்தப் படத்தில் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள். வசனங்கள் இயல்பாக உள்ளன. பாடல்களை இசை அமுக்கவில்லை.

    மைக்கேல் ஜாக்சன் ஆட்டம் போடுவதற்கு வசதியாக சில சில இசையை உருவாக்கி வைத்திருந்தார். அதை தமிழ் இசையில் காப்பியடித்து கொண்டு வந்து விட்டனர். தாலாட்டு பாட்டை டான்ஸ் ஆடிக் கொண்டு பாடலாமா? சமூகத்தின் குரலுக்குதான் தாளம் போட வேண்டும்.

    பாலும் பழமும், பாசமலர் படத்துக்கு பிறகு முழுமையாக கேட்கும் பாடலாக இந்த படத்தின் பாடல்கள் அமைந்துள்ளன.

    படங்களில் பாலுறவை திணிக்கிறார்கள். பாலுறவு பக்தி மாதிரி, நெஞ்சுக்குள் வைத்திருக்க வேண்டும் வெளியே காட்டக் கூடாது. தேவையில்லாமல் பாலுறவு திணிக்கப்படுகிறது. தென் மேற்கு பருவக்காற்று படத்தில் துளியும் ஆபாசம் இல்லை...", என்றார் வைரமுத்து.

    இந்தப் படத்தை தயாரித்துள்ள ஷிபு ஐசக், ஒரு முன்னாள் ராணுவ வீரர். கேப்டன் அந்தஸ்தில் இரண்டு போர்க்களங்களைக் கண்டவர்.

    அவர் பேசுகையில், "நான் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொள்ள காரணம், தமிழர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்த கதை. இந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் சீனு கூறியிருக்கிறார். ஏன் இதை தயாரிக்க அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் சினிமாவின் தரத்தை வேறகு தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இதை அவர் உருவாக்கியிருக்கிறார்.

    நான் ராணுவத்தில் இருந்தவன். ஒவ்வொரு ராணுவ வீரனும் போர்க்களத்துக்கு செல்லும் முன் கடைசியாகப் பேச விரும்புவது, தன் தாயிடம்தான். நானும் இருமுறை போருக்குச் சென்றேன், கடைசியாக என் அம்மாவிடம் 'போகிறேன்' என்று சொல்லிச் சென்றேன். அப்போது என் அம்மாவின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் வார்த்தையாக சொல்ல முடியவில்லை. அதை இப்போது படமாகவே தந்திருக்கிறார் சீனுராமசாமி. இந்தப் படத்துக்கு ஆதரவு தாருங்கள்," என்றார்.

    தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், நடிகை சரண்யா இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள். படத்தின் மக்கள் தொடர்பாளர் பி டி செல்வகுமார்.

    English summary
    Poet Vairamuthu criticises that the present film makers imposed sexual vulgarity in films. According to him, sex is an internal feel that should be preserved like devotional.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X