கேன்சர் - விலகினார் ஜேட் கூடி!

லண்டன் டிவியில் ஒளிபரப்பான பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியுடன் பங்கேற்றவர் ஜேட் கூடி. அப்போது ஷில்பாவை நிறவெறி வார்த்ைதகளால் துன்புறுத்தியதாக பெரும் சர்ச்சையில் சிக்கினார். அந்த நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி பெற்றார். அவரிடம் பின்னர் ஜேட் கூடி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் இந்தியாவின் கலர்ஸ் டிவியில், பிக் பாஸ் என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜேட் கூடி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஹோஸ்ட் ஆக ஷில்பா ஷெட்டி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேட் கூடி உள்பட மொத்தம் 14 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு இந்த ரியாலிட்டி ஷோ ஆரம்பித்தது. இந்த நிலையில் போட்டியிலிருந்து ஜேட் கூடி விலகியுள்ளார். அவருக்கு புற்று நோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் திரும்ப முடிவு செய்தார் கூடி.
இதுகுறித்து கலர்ஸ் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு இங்கிலாந்தில் ரத்தப் பரிசோதனை செய்திருந்தார் கூடி. அதன் முடிவுகள் தற்போது அவருக்குக் கிடைத்துள்ளன. அதில் அவருக்கு புற்று நோய் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக கூடி லண்டன் கிளம்புகிறார்.
ஷில்பா அதிர்ச்சி:
ஜேட் கூடிக்கு புற்று நோய் வந்திருப்பது குறித்து ஷில்பா ஷெட்டி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், இதை நம்பவே முடியவில்லை. வாழ்க்கை எந்தளவுக்கு கணிக்க முடியாததாக உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நமது வாழ்க்கையை தடம் புரண்டு போகச் செய்து விடுகிறது.
ஜேட் நலம் பெற வேண்டும் என அவருக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஷில்பா.


Click it and Unblock the Notifications











