'முதல்வர்' மகாத்மா!

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை சரிதத்தை, காமராஜ்- தி கிங் மேக்கர் என்ற பெயரில் இயக்கியவர் பாலகிருஷ்ணன்.
காமராஜர் குறித்த பல அரிய தகவல்களை இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அற்புதமாக இருந்தது காமராஜ் படம்.
இப்போது மகாத்மாவை வைத்து தனது 2வது படத்தை எடுக்க தயாராகி விட்டார் பாலகிருஷ்ணன். ஆனால் இது மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. மகாத்மாவை கேரக்டராக வைத்துப் புனையப்பட்டுள்ள கற்பனைக் கதையாகும்.
இன்றைய கால கட்டத்தில் காந்தி இருந்தால் எப்படி இருக்கும். அவர் என்ன மாதிரியெல்லாம் செயல்படுவார் என்பதை தனது கற்பனைக் கதையில் சொல்லப் போகிறார் பாலகிருஷ்ணன்.
இப்படத்தில் காந்தி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரும் ஆகிறாராம். அதனால்தான் படத்துக்கு முதல்வர் மகாத்மா என்று பெயரிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணன்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், இன்றைய சூழ்நிலையின் பின்னணியில் மகாத்மாவை நான் எனது கதாபாத்திரமாக அமைத்துள்ளேன். எல்லாமே வணிகமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், காந்தி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் விளைவே இப்படம்.
தேச ஒருமைப்பாடு உள்பட எல்லாமே இங்கு வியாபாரமாகி விட்டது. இந்தப் படத்தில் 21வது நூற்றாண்டைச் சேர்ந்தவராக காந்தி வருகிறார்.
நாட்டிலிருந்து ஊழலை அகற்றப் போராடுகிறார். அகிம்சை, எளிமை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றை வலியுறுத்துகிறார்.
நாட்டிலிருந்தும், ஏன் இந்த உலகத்திலிருந்தும் வறுமையை விரட்டும் வழியைக் காட்டுகிறார்.
காந்திய சிந்தனைகள் இந்தக் காலகட்டத்திற்கும் ஏற்றதாகவே உள்ளன. அவற்றை தற்போதைய சமூகத்திற்கு எடுத்துக் காட்டும் படமாகவே இது இருக்கும் என்றார் அவர்.
காந்தி வேடத்தில் கனகராஜ் என்பவர் நடிக்கவுள்ளார். இவர் காமராஜ் படத்தில் காந்தி வேடத்தில் நடித்தவர். மேலும் சில முக்கியப் பாத்திரங்களில் நடிக்க நஸ்ருதீன் ஷா, நானா படேகர் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியுள்ளாராம் பாலகிருஷ்ணன்.
படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியுள்ளாராம். அவரும் சம்மதித்துள்ளாராம். விரைவில் படம் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிடவுள்ளார் பாலகிருஷ்ணன்.


Click it and Unblock the Notifications











