மோகன்லால் மேஜிக்குக்கு எதிர்ப்பு

நடிகர் மோகன்லால் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். நெருப்பு சாகச நிகழ்ச்சி ஒன்றை தான் செய்யப் போவதாக அறிவித்தார். அதன்படி, கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மோகன்லால், ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு நெருப்புக்குள் விடப்படுவார். அங்கிருந்து அவர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் தப்பி வர வேண்டும்.
இதை மேஜிக் வித்தை மூலம் தான் செய்யவிருப்பதாக மோகன்லால் அறிவித்தார். இந்த வித்தையை கடந்த 2 ஆண்டுகளாக கோபிநாத் முத்துக்காட் என்கிற மேஜிக் நிபுணரிடம் தான் கற்று வருவதாகவும் கூறியிருந்தார் மோகன்லால்.
ஏப்ரல் 27ம் தேதி திருவனந்தபுரத்திதல் இந்த சாகசத்தை செய்யவிருப்பதாகவும் மோகன்லால் அறிவித்துள்ளார்.
மோகன்லாலின் இந்த அறிவிப்புக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 300க்கும் மேற்பட்ட மேஜிக் நிபுணர்களை உறுப்பினர்களாக கொண்ட கேரள மாஜிக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜீஸ் மற்றும் பிரபல மேஜிக் நிபுணர் சாம்ராஜ் ஆகியோர் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசியது, இது மிகவும் ஆபத்தானது, விபரீதமானது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து சாம்ராஜ் கூறுகையில், கடந்த 2 ஆண்டுளாக கோபிநாத் முத்துக்காட்டிடம் இந்த நெருப்பு சாகச வித்தையை பயின்று வருவதாக மோகன்லால் கூறியிருப்பது நம்பும்படி இல்லை. இது சாத்தியமே இல்லாதது.
மேஜிக் வித்தை என்பது பல ஆண்டு கால கடின உழைப்புக்குப் பின்னர் கை கூடும் ஒன்று. அதை 2 ஆண்டுளில் கற்றுக் கொண்டு விட்டதாக மோகன்லால் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
மிகப் பெரும் மேஜிக் நிபுணர்களால் மட்டுமே செய்யக் கூடிய, கடுமையான பயிற்சிக்குப் பின்னர் செய்ய கூடிய நெருப்பு சாகசத்தை மோகன்லால் செய்யப் போவதாக கூறுவதை எங்களையெல்லாம் கேலி செய்வது போல உள்ளது.
மோகன்லால் எனக்குப் பிடித்த நடிகர். அவரது பரம விசிறி நான். அவரை மிகவும் மதிக்கிறேன். அதேசமயம், இந்த வித்தை நிகழ்ச்சி அவருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
மோகன்லால் வித்தை கற்றுக் கொண்டதாக கூறப்படும் கோபிநாத் முத்துக்காட், 6 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைனில் இதேபோன்ற சாகசத்தை செய்ய முயன்றபோது பலத்த தீக்காயமடைந்தார். அவராலேயே முடியாதது எப்படி மோகன்லாலால் முடியும் என்று தெரியவில்லை.
மலிவான விளம்பரத்திற்காக மோகன்லாலைப் பயன்படுத்தப் பார்க்கிறார் முத்துக்காட். இது கண்டனத்துக்குரியது என்றார் சாம்ராஜ்.
பிரதீப் மேனன் என்கிற மேஜிக் நிபுணர் கூறுகையில், இதுபோன்ற கடினமான வித்தைகளை செய்ய முயன்று உயிரை விட்டவர்கள் பலர். எனவே மோகன்லால் இந்த விஷப் பரீட்சையை கைவிட வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











