20 டிவி சானல்களைத்த தொடங்குகிறது ரிலையன்ஸ்

அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் டிவி சானல்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. செய்தி, இசை மற்றும் பொழுதுபோக்கு தொடர்பாக 20 சானல்களை அது அதிரடியாக தொடங்கவுள்ளது.
இதற்கு உரிமம் கோரி மத்திய அரசிடம் அனுமதி கேட்டு ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
புதிய தொழில் என்று எதைத் தொடங்கினாலும் அதை பிரம்மாண்டமாகச் செய்வதுதான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வழக்கமான ஸ்டைல். சாட்டிலைட் சானல் டிவி துறையிலும் அதேபோல் அதிரடியான திட்டத்துடன் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் அட்வர்டைஸ்மெண்ட் எண்டர்டெயின்மெண்ட் களம் இறங்கியுள்ளது.
புதிதாக 20 டிவி சானல்களைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
இவற்றில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி சானல்கள், திரைப்படம், இசை, செய்தி மற்றும் லைப் ஸ்டைல் சானல்கள் அடங்கும்.
பெரு நகரங்கள் மற்றும் பிராந்திய அளவில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சிகளை தயாரித்து இவற்றில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சானலுக்கும் தனித்தனி பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் எப்.எம் ரேடியோ, ஆன்லைன் சினிமா வெப்சைட், சினிமா மியூசிக் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய எல்லா பிரிவுகளும் 'பிக்' என்ற பொதுவான பிராண்ட் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அதேபோல ரிலையன்ஸ் தொடங்கும் டிவி சானல்களும், 'பிக் டிவி' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படும்.
வரும் ஜூலையில் முதலில், இந்தி திரைப்பட சானலை அது தொடங்குகிறது. ஆட்லாப்ஸ் என்ற பேனரில் ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் அதன் கைவசம் உள்ள கங்காஜல், டாக்ஸி நம்பர் 9211, பிளப் மாஸ்டர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை வளைத்துப் போடத் தயாராக உள்ளது.
இதைத் தொடர்ந்து மற்ற பிராந்திய மொழி சானல்களை வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











