தஞ்சை மண் வாசத்துடன் வரும் 'கரிசல்மண்'!

ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் ஒரு பெண்ணின் சூழ்ச்சியில் மயங்கி சொத்தைப் பிரித்துக் கொண்டு குடும்பத்தை முறைப்பாடு செய்து கொள்கிறார்கள்.
அதாவது அவர்களின் அம்மாவும் தங்கையும் அண்ணன் வீட்டில் ஆறு மாதம், தம்பி வீட்டில் ஆறுமாதம் என தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. இவர்களின் சண்டையால் ஊரே இரண்டுபட்டு நிற்கிறது. அந்த சகோதரர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை தஞ்சை மண் மணத்துடன் படமாக வடித்திருக்கிறார்களாம்.
தமிழ்ச் செல்வன் எனும் பிரதான வேடத்தில் நீண்ட நாளைக்குப் பிறகு நடிக்கிறார் சரண்ராஜ்.
அவருடன் புதுமுகங்கள் கிருஷ்ணா, புவனேஸ்வரி மற்றும் லாவண்யா நடிக்க ஆறுபடை பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சுப.தமிழ்வாணன் இயக்குகிறார். யாணி தேஷ் இசை அமைக்கிறார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் பிலிம் சேம்பரில் நடந்தது. முதல் சிடியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி சேகரன், தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஜே.வி.ருக்மாங்கதன், தயாரிப்பாளர்கள் பைந்தமிழ்செல்வன், சி.ஆர்.நீலகண்டன், ஜி.வி.சாமி, சவுந்திரராஜன் மற்றும் ரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











