வசூலை அள்ளும் அமீர் படம்!

சுதந்திரப் பறவைகளாக சிறுவர்களை விட வேண்டும், தங்களது கனவுலகில் வாழ அவர்களுக்கு அனுமதி தர வேண்டும். அவர்களின் சின்ன முதுகில் பெரிய பெரிய லட்சியங்களையும், எதிர்பார்ப்புகளையும் பொதி போல சுமத்தக் கூடாது என்ற கருத்துடன் கூடிய படம் தாரே ஜமீன் பர்.
நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் தாரே ஜமீன் பர் பெரும் வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்து வருகிறதாம்.
இப்படத்தை அமீர்கானே இயக்கியுள்ளார். அவரது முதல் இயக்கத்தில் வெளியான படமும் இதுதான்.
எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்க்கும் உலகில், ஆசிரியர்களாலும், பெற்றோராலும் இவன் எங்கே தேறப் போகிறான் என்று கைவிடப்பட்ட மாற்றுத் திறன் படைத்த (dyslexic child) சிறுவன்தான் இஷான். தன்னைச் சூழ்ந்த சவால்களை இஷான் எப்படி சமாளிக்கிறான். சாதிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
இஷானின் அட்டகாச நடிப்பும், திரைக்கதை அமைப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டிசம்பர் 21ம் தேதி வெளியான இப்படம், உலகம் முழுவதும் ரூ. 75 கோடியை வசூலித்துள்ளதாம்.
இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 61.3 கோடியை வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் இதன் வசூல் ரூ. 5 கோடியாகும். இங்கிலாந்தில் ரூ. 2.44 கோடியாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ரூ. 13 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.
ஆரம்பத்தில் படத்திற்கு சரிவர கூட்டம் வரவில்லை. ஆனால் படம் குறித்த பேச்சு வெளியில் கிளம்பத் தொடங்கிய பின்னர் பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக மாறியுள்ளது.
சமீபத்தில் இப்படத்ைதப் பார்த்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். அத்வானிக்காக, அமீர்கான் இப்படத்தை போட்டுக் காண்பித்தார். படத்தைப் பார்த்த அத்வானி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாராம். இதுவரை அத்வானி அழுததை தான் நேரில் பார்த்ததே இல்லை. அவரது அழுகை என்னை நெகிழ வைத்து விட்டதாக அமீர்கான் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
மும்பை, டெல்லியில் இப்படத்திற்கு மாநில அரசுகள் வரி விலக்கு அளித்துள்ளன. இதன் காரணமாக பெருவாரியான மக்கள் படத்தைப் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது.
விரைவில் சக் தே இந்தியா, ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களின் வசூலை தாரே ஜமீன் பர் முந்தும் என்று பாலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.
இந்தப் படத்தால் ஏற்பட்ட பாதிப்பும் மிகப் பெரியது. படத்தைப் பார்த்த வடோதரா மாநகராட்சி நிர்வாகம், தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், போதனை முறையையும், பாடத் திட்டத்தையும் மாற்றத் தீர்மானித்துள்ளதாம்.
வடோதரா மாநகராட்சியின் கீழ் வரும் 115 பள்ளிகளில் பணியாற்றும் 1200 ஆசிரியர்களும் இப்படத்தைப் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











