நியூயார்க் விழாவில் நந்திதா நடித்த பாக். படம்

மெஹ்ரீன் ஜப்பார் என்ற பாகிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளரின் படைப்பில் உருவான 'ராம்சந்த் பாகிஸ்தானி' என்ற படத்தில் நடிகை நந்திதா தாஸ் கதாநாயாகியாக நடித்துள்ளார்.
உளவு பார்த்ததாக இந்திய ராணுவத்தால் சிறையிலடைக்கப்பட்ட 7 வயதான ஒரு பாகிஸ்தானிய இந்து சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகியோரின் உண்மைக்கதையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டது.
கதைப்படி, ராம்சந்த் என்ற 7 வயது சிறுவனின் தாயாக 'சம்பா' என்ற பாத்திரத்தில் நந்திதா நடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளினால் அப்பாவி மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களைப் பற்றி இந்தப்படத்தில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் இருநாட்டு மக்களிடையே நல்லுறவு மலருவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் மையக்கருவாக, 'இரு தேசங்களின் போர்வெறி- ஒரு குடும்பம் சிதைந்த கதை' விளம்பரப்படுத்தியிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
நியூயார்க் திரைப்படவிழாவில் உலகின் 41 நாடுகளில் இருந்து மொத்தம் 79 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் ராம்சந்த் பாகிஸ்தானியும் அடங்கும். வரும் மே 4ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜப்பார் கூறுகையில், அம்மாவின் நினைவே இல்லாமல் இந்திய சிறையிலேயே தந்தையுடன் வளரும் சிறுவன் ராம்சந்த்தை மையமாக வைத்தே இந்தப்படம் முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கலந்து வாழ்ந்துவரும் இந்து மற்றும் முஸ்லிம் இன மக்களின் உணர்வுபூர்வமான உறவின் அடிப்படையிலான கதையம்சம் கொண்ட படம் இது என்றார்.
மாற்று கலாசாரங்களை புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்படும் படங்களுக்கான குளோபல் இனிஷியேடிவ் கிராண்ட் என்ற அமைப்பின் விருதை ராம்சந்த் பாகிஸ்தானி சமீபத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











